விசூர் கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்-ரூ.2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம், செப்.13:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷார் கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,கோட்டாட்சியர் வெங்கடேஷ்,உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விசூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி வரவேற்றார்.
விழாவில் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கலந்து கொண்டு இலவசவீட்டு மனைப் பட்டாக்கள் 162 பேர், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு தொகை 13 பேர்,ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகளிர் சுய உதவிக் குழு வங்கிக்கடன்கள் 12 பேர்,குடும்ப அட்டை 62 பேர் உட்பட மொத்தம் 256 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முகாமில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் தொடர்பாக 36 மனுக்கள் பெறப்பட்டு உரிய முறையில் அதற்கும் தீர்வு காணப்பட்டது.
முகாமில் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வசந்தி குமார்,விஷார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments