Breaking News

அக்.13ம் தேதி - பரந்தூரில் விவசாயிகள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்படும் - விவசாயிகள் சங்கம் தீர்மானம்

காஞ்சிபுரம், செப்.22:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரந்தூர் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் வரும் அக்.13 ஆம் தேதி அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் செட்டிப்பேட்டை சிஐடியூ அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நெல்வாய் கிராமத்தை சேர்ந்த பி.குணசேகரன் தலைமை வகித்தார்.

சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கே.நேரு,மாவட்ட தலைவர் சாரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.

இக்கூட்டத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அரசால் நியமிக்கப்பட்ட மச்சேந்திரநாதன் குழுவினரின் அறிக்கையை அரசு வெளியிட வேண்டும், விமான நிலைய அமையவுள்ள பாதிக்கப்படப்போகும் 8 கிராமங்களிலும் விவசாயிகளின் வீடுகளில் வரும் அக்.13 ஆம் தேதி கருப்புக்கொடி ஏற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதாரக் குழுவும் அமைக்கப்பட்டு அதன் ஒருங்கிணைப் பாளராக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேருவை நியமித்தும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments

Thank you for your comments