Breaking News

தவெக கொடி அறிமுகம் - நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

சென்னை: 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.22) நடைபெற்றது.  இதில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்தார்

“தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வெறும் கட்சிக் கொடியாக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக நான் பார்க்கிறேன்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

காலை 9.15 மணிக்கு விழா மேடைக்கு விஜய் வருகை தந்தார். அவர், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் நிர்வாகிகளை வரவேற்றார்.


கொடி அறிமுகம்

தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரையாற்றினார். பின்னர் கட்சித் தலைவர் விஜய் கூற நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து கட்சிக் கொடியை மேடையில் விஜய் அறிமுகம் செய்தார்

கொடி ஏற்றம் -கொடி பாடல் 

பின்னர், கட்சித் தலைமையகத்தில் கொடி கம்பத்தில் 9.30 மணியளவில் கொடியை ஏற்ற தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பின்னர் கட்சியின் கொடி பாடல் திரையிடப்பட்டது. அப்போது விஜய் மற்றும் ஆனந்த் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் கண் கலங்கினர். தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என தொடங்கிய பாடலின் திரையிடல் முடிந்ததும் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.



இரு போர் யானைகளுடன், வாகை மலர்: 

முதலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்து ஏற்றி வைத்தார். இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.

தவெக தொண்டர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி பின்வருமாறு: 

“நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” இவ்வாறு அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தவெக தலைவர் விஜய்  விழாவில் பேசியதாவது: 

“இன்று நம் எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷமான ஒரு நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி அதன் தொடக்க புள்ளியாக கட்சியின் பெயரை பிப்ரவரி மாதம அறிவித்தேன் அன்றிலிருந்து குறிப்பிட்ட ஒரு நாளுக்காக நீங்கள் அனைவரும் காத்திருந்தீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. ஆம் நம் முதல் மாநில மாநாடு. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

சீக்கிரமே மாநாடு என்றைக்கு நடக்கிறது எப்போது என்பதெல்லாம் நான் அறிவித்து விடுவேன். அதற்கு முன் நீங்கள் எல்லாருமே கொண்டாடி மகிழ்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் முன்னாலும் சரி கொடியை அறிமுகப்படுத்துவதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.


இனி தமிழக மக்களுக்காக உழைப்போம்

இதுவரைக்கும் நாம் நமக்காக உழைத்தோம், இனி வரப்போகும் காலத்தில் கட்சி ரீதியாக நம்மை தயார்ப்படுத்தி தமிழகத்துக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து உழைப்போம்.

புயலுக்கு பின் அமைதி ஆர்ப்பரிப்பு ஆரவாரம் இருப்பது போல் நம் கொடிக்கு பின்னாலும் ஒரு வரலாற்று குறிப்பு ஒன்று இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஒரு நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னேன் அல்லவா அன்றைக்கு நம்முடைய கொள்கைகள் என்ன? நம்முடைய செயல் திட்டங்கள் என்ன? என சொல்லும்போது அன்றைக்கு இந்த கொடிக்கான விளக்கத்தையும் சொல்கிறேன். அதுவரை இந்த கொடியை ஒரு சந்தோஷமா, ஒரு கெத்தா, நாம் ஏற்றிக் கொண்டாடுவோம்.

வெறும் கட்சிக் கொடி அல்ல, வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடி

இதை கட்சிக் கொடியாக நான் பார்க்கவில்லை. தமிழகத்தின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கான ஒரு கொடியாகவே பார்க்கிறேன். இதனை உங்கள் உள்ளத்திலும் உங்கள் இல்லத்திலும் நான் சொல்லாமலேயே ஏற்றி விடுவீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று விதிகளை கடைபிடித்து அனைவரிடமும் தோழமை பாராட்டி கொடியை ஏற்று கொண்டாடுவோம். அதுவரைக்கும் தன்னம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” இவ்வாறு விஜய் பேசினார். 

நிகழ்ச்சியில் பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கட்சி தொடக்கம்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கட்சியில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து நிலையிலான நிர்வாகிகளும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக கடந்த 19-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயக்குமார்: 

பொதுவாகவே ஒரு கட்சி ஆரம்பித்தால் கொடி அறிமுகம், மாநாடு ஆகியவை தொடர்ச்சியாக நடக்கும் விஷயங்கள்தான். அந்த அடிப்படையில், இன்று தவெக கொடியை அதன் தலைவர் விஜய் அறிமுகம் செய்துள்ளார். எந்த ஒரு கட்சியுமே பிறரை வீழ்த்திவிட்டு தான் மேலே வரவேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில்தான் அந்த பாடலில் எதிர்களை வீழ்த்துவது போல வைக்கப்பட்டிருக்கலாம். ஜனநாயக நாட்டில் இறுதி எஜமானர்கள் மக்கள்தான். எதுவாக இருந்தாலும் மக்கள்தான் முடிவு செய்வார்கள். மாநாட்டில் விஜய் என்ன பேசுகிறார் என்பதை வைத்துதான் எதுவாக இருந்தாலும் சொல்லமுடியும்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்: 

ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்குவது ஜனநாயக உரிமை. விஜய் எதை சாதிக்க நினைக்கிறாரோ அந்த நோக்கத்தில் அவர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறென். அவருடைய கொள்கை கோட்பாடுகள், நடைமுறைகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டபிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். திமுக எந்த சூழ்நிலையிலும் இதை ஒரு போட்டியாக நினைக்கவில்லை. இந்த மண்ணில் திராட இயக்கங்களின், பெரியாரின் தத்துவத்தை கொண்டு தான் ஒரு இயக்கம் முன்னேற முடியும் என்று விஜய் உணர்ந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியை தருகிறது.

செல்வப்பெருந்ததகை: 

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தங்கள் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய விஜய்க்கு எங்களுடைய வாழ்த்துகள். விஜய்யின் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 



No comments

Thank you for your comments