Breaking News

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது, 

பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.

பிறப்பு சான்றிதழ் பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றிமையாத ஆவணமாக உள்ளது.

ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப்பின் 15 வருடங்களுக்குள் ரூ.200/- தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.

இந்நிலையில் இந்திய தலைமை பிறப்பு பதிவாளரின் அறிவுரைபடி, 01.01.2000க்கு முன்பு பிறந்தவர்கள் 2000 ஆம் ஆண்டை கணக்கில் கொண்டு 15 ஆண்டுகள் என 31.12.2014 ஆம் ஆண்டு வரை பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்ய கால வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. 

இந்நிலையில் பிறப்பு சான்றிதழில் நிறைய பெயர்கள் பதிவு செய்யப்படாததால் ஐந்து ஆண்டு காலம் அவகாசம் கொடுத்து 31.12.2019 வரை நிட்டிப்பு செய்யப்பட்டது. பெயர் பதிவு செய்ய அவகாசம் தேவைப்பட்டதால் மேலும் ஐந்து ஆண்டு காலம் அதாவது 31.12.2024 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி ஆணையர், சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலர் ஆகியோரிடம் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் 31.12.2024 க்குள் பெற்றுக் கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர்

திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments