காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் நான்கு வழிச்சாலை விரிவாக்கத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கையிலிருந்து செவிலிமேடு செல்லும் பகுதியில் அமையவுள்ள 4 வழிச்சாலை விரிவாக்கத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரம் கெட்டு விடும் எனவும் மாற்றுப்பாதையில் செயல்படுத்துமாறும் ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதி குழு உறுப்பினர் ஜெ.கமலநாதன்,ஓரிக்கை பகுதி சாலையோரத்தில் குடியிருக்கும் பகுதி மக்கள், வணிகர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆ.கோட்டி ஆகியோர் தலைமையில் ஒரிக்கை பகுதி பொதுமக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அக்கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..
ஓரிக்கையிலிருந்து செவிலிமேடு வரை அண்மையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.அவ்விரிவாக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்காமல் மாவட்ட நிர்வாகம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போதுள்ள சாலையை 4 வழிச்சாலையாகவும், அந்த சாலையில் மேம்பாலம் அமைக்கப் போவதாகவும் செய்திகள் வருகின்றன.4 வழிச்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் இதே சாலையில் அமைந்தால் பலரது குடியிருப்புகளுக்கு ஆபத்து ஏற்படும்.சிறு வணிகர்களின் வாழ்வாதாரமும் பாதித்து விடும்.
எனவே பொதுமக்கள், வணிகர்கள்,குடியிருப்பு வாசிகளின் நலன் கருதி 4 வழிச்சாலை விரிவாக்கத்தையும், அப்பகுதியில் வரவுள்ள மேம்பாலத்தையும் உடனடியாக மாற்றுப்பாதையில் செயல்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கோரிக்கை மனுவை உரிய அலுவலர்களுக்கு அனுப்பி இது குறித்து பரிசீலிப்பதாகவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
No comments
Thank you for your comments