ஓரிக்கை மகா பெரியவர் மணிமண்டபத்தில் இலவச மருத்துவ முகாம்
காஞ்சிபுரம், ஜூலை 27:
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கும் 48 நாட்களும் ஒரிக்கை மகா பெரியவர் மணி மண்டபம் அருகில் உள்ள மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூலை 24 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார்.
சுவாமிகள் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் மகா பெரியவர் மணி மண்டப வளாகம் அருகே அமைந்துள்ள மருத்துவமனையில் காலையில் ஆயுர்வேத மருத்துவ முகாமும்,மாலையில் அலோபதி மருத்துவ முகாமும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
பூந்தமல்லி நசரத்பேட்டையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் சுவாமிநாதன் நேரடி மேற்பாவையில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
மாலையில் நடைபெறும் அலோபதி மருத்துவ முகாம் காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல் நோக்கு மருத்துவமனையின் சார்பில் அதன் தலைவர் பம்மல்.விஸ்வநாதன் தலைமையில் நடைபெறுகிறது.
இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் கூறுகையில் சாதுர்மாஸ்ய விரதத்தின் போது சுவாமிகளை சந்தித்து ஆசி பெற வரும் பக்தர்களுக்காக இலவச மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் முகாம்களில் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்படுகிறது.மேலும் பக்தர்களின் வசதிக்காக காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து ஓரிக்கை மணி மண்டபம் வரை இலவசமாக பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இப்பேருந்து சங்கர மடத்திலிருந்து புறப்பட்டு காமாட்சி அம்மன் கோயில்,பேருந்து நிலையம்,கச்சபேசுவரர் கோயில் ஆகிய இடங்களில் நின்று செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள், பொதுமக்கள்,சுற்றுப்புற கிராம மக்கள் இலவச மருத்துவ முகாம்களையும், இலவச பேருந்து வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறும் ந.சுந்தரேச ஐயர் கேட்டுக்கொண்டார்.
பேட்டியின் போது ஸ்ரீ மடத்தின் செயலாளர் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments