வேலூர் மாநகராட்சி நோட்டீசை உதாசீனப்படுத்தும் கட்டிட உரிமையாளர்... மௌனம் காக்கும் உயர் அலுவலர்கள்... பின்னணியில் யார்?
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் காகிதப்பட்டறையில் உள்ள முறையான அனுமதியின்றி விதிமீறிய கட்டிடங்களான இரண்டு தங்கும் விடுதி மீது உரிய அமலாக்க நடவடிக்கை எடுக்கமாறு வேலூர் மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம், வேலூர் மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதாம் கடிதம் அனுப்பியது.
ஆனால் வேலூர் மாநகராட்சி அலுவலர்களோ, உள்ளூர் திட்ட குழுமம் கடிதம் அடிப்படையில், அமலாக்க நடவடிக்கை என்ற பெயரில் விதிமீறிய இரண்டு தங்கும் விடுதிகளுக்கு கடந்த ஏழுமாத காலமாக நோட்டீஸ் வழங்கி கொண்டிருக்கின்றனர்.
நோட்டீசை உதாசீனப்படுத்தும் கட்டிட உரிமையாளர்
கட்டிட உரிமையாளர்களோ கட்டிடங்களுக்கு வர்ணம் பூசி புதுப்பித்தும், தொடர்ந்து தங்கும் விடுதி செயல்படுத்தியும் வருகின்றனர்.
அப்படியென்றால்.. மாநகராட்சி வழங்கிய நோட்டீஸ் கண்துடைப்பா என்ற கேள்வி எழுகிறது? உள்ளூர் திட்ட குழுமத்தை ஏமாற்றும் செயலா?. அல்லது மாநகராட்சி நோட்டீஸ் மதிப்பற்றதா? கட்டிட உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளையும், மாநகராட்சி வழங்கிய நோட்டீசையும் உதாசீனம் செய்கின்றார்களா? என்று அடிக்கடுக்கான கேள்வி எழுகின்றது
மதாந்திர அறிக்கை எங்கே?
இந்த நிலையில், கடந்த மாதம் நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு அனுமதியற்ற மற்றும் விதிமீறிய கட்டிடங்கள் மீதான நடவடிக்கை அறிக்கை குறித்து ஆணை அனுப்பினார்.
அதில், 1. நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 56 மற்றும் 57, தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998, 133-136 (Building regulations in areas otherthan hills stations) 145 B (Building regulations in hills stations) 139- மாறான மற்றும் அனுமதிக்கு மாறான உபயோகம் கொண்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவிப்பு வழங்கப்பட்ட விவரம், பூட்டி முத்திரை இடப்பட்ட விவரம், மேல்முறையீடு செய்யப்பட்ட விவரம் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட விவரம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாவட்ட கண்காணிப்பு குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட விரிவான மதாந்திர அறிக்கை விவரம்.
2. புதிதாக கண்டறியப்பட்ட / புகாராக பெறப்பட்ட அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பாக
மாவட்ட கண்காணிப்பு குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட விரிவான மதாந்திர அறிக்கை விவரம்.
3. இவற்றின் மீது கண்காணிப்பு குழுவால் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம்
4. மாவட்ட கண்காணிப்பு குழுவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை அணுகி நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரம்
ஆகியவற்றை பட்டியலில் பூர்த்தி செய்து அரசுக்கு சமர்ப்பிக்க ஏதுவாக, மாநகராட்சி ஆணையாளர்கள் மேற்படி விவரங்களை இவ்வலுவலகத்திற்கு நேரடியாகவும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், நகராட்சி ஆணையாளர்களிடமிருந்து விவரங்களை பெற்று அவற்றை தொகுத்து, இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று சுற்றறிக்கை ஆணை அனுப்பப்பட்டது.
ஆனால், இந்த ஆணையின் அடிப்படையில் கூட வேலூர் மாநகராட்சி உயர் அலுவலர்கள் செயலாற்றினார்களா? மதாந்திர அறிக்கை எங்கே? என்ற கேள்வி எழுகிறது.
அதாவது, அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் அல்லது புகார் பெறப்பட்டால். மாநகராட்சி மேற்கொள்வேண்டிய நடவடிக்கை என்ன? வேலூர் மாநகராட்சி உரிய கால அளவையும் அரசு விதிகளையும் பின்பற்றுகிறாதா?
பொதுவான விதிமுறைகள்;
ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல்:
- மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிலத்தை ஆய்வு செய்து மீறல் சம்பந்தமான ஆதாரங்களைச் சேகரிப்பார்கள்.
காரணம் காணும் நோட்டீஸ் வழங்குதல்:
- காரணம் காணும் நோட்டீஸ், நில உரிமையாளருக்கு அல்லது நிலத்தை பயன்படுத்தும் நபருக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மீறலுக்கான காரணத்தை விளக்க வேண்டும் என்று கேட்கப்படும்.
விசாரணை:
- விசாரணை நடத்தப்படும், அதில் நில உரிமையாளர் அல்லது பயன்பாட்டாளர் தங்கள் தரப்பை விளக்க மற்றும் தொடர்புடைய ஆவணங்களை வழங்க முடியும்.
இறுதி முடிவு:
- விசாரணை மற்றும் வழங்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, மாநகராட்சி இறுதி முடிவை எடுக்கும். மீறல் உறுதி செய்யப்பட்டால், மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கைகள்:
- மீறல் நீடித்தால் அல்லது விளக்கம் திருப்திகரமாக இல்லையெனில், மாநகராட்சி பின்வரும் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கலாம்:
- மாநகராட்சி விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் படி அபராதங்கள் அல்லது தண்டனைகளை விதித்தல்.
- அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்தல் அல்லது நிலத்தை சீல் வைத்தல்.
உத்தரவை செயல்படுத்துதல்:
- மாநகராட்சி எடுக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தும், அதில்:
- நிலத்தை உடனடியாக பூட்டுதல்.
- அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்தல்.
- அபராதங்கள் மற்றும் தண்டனைகளை விதித்தல் ஆகியவை அடங்கும்.
செலவுகளை மீட்டெடுத்தல்:
- மீறலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சிக்கு ஏற்பட்ட செலவுகள் நில உரிமையாளரிடமிருந்து அல்லது பயன்பாட்டாளரிடமிருந்து மீட்டெடுக்கப்படும்.
இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட கட்டிடம், நிலம் தொடர்பான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் புதிய விண்ணப்பம் அளிக்கப்பட்டால், அதை ஆய்வு செய்து, விதிமீறல் பகுதி இடிக்கப்பட்டதை உறுதி செய்து, அனுமதி அளிக்கலாம். இல்லாவிட்டால் விண்ணப்பத்தை திருப்பிஅனுப்பலாம்.
கால அவகாசம்:
ஒருவேளை விதிகளை மீறி ஏற்கெனவே கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலையில், முன் அனுமதிபெறாமல் அல்லது அரசால் அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ள இனங்களில், அந்த கட்டுமானத்தை இடித்து, நிலத்தை முன்பிருந்த நிலையில் காட்டுமாறு அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கலாம். இதற்கு30 நாட்கள் அவகாசம் அளிக்கலாம்.
கட்டிட அனுமதி வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்த நிலம் அல்லது கட்டிடத்தை பயன்படுத்துவதை நிறுத்திவைக்கும்படி நோட்டீஸ் வழங்கலாம். பணிகள் நடைபெற்று வரும் கட்டிடம், நிலத்தைப் பொருத்தவரை, அலுவலர் ஆய்வின்போது விதிமீறல் கண்டறிந்தால், பணியைநிறுத்தி வைக்குமாறு நோட்டீஸ் வழங்கலாம். அவ்வாறு நிறுத்திவைக்காமல் பணி தொடரப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர், குறிப்பிட்ட விதிமீறல் பகுதியை 7 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிடலாம்.
சீல் வைக்க அனுமதி:
இவற்றையும் மீறி கட்டிடப் பணிகள் தொடரும்பட்சத்தில், அந்தவளாகத்தை மூடி சீல் வைக்க திட்டக்குழுமத்துக்கோ, மாநகராட்சி அலுவலருக்கோ அதிகாரம் உண்டு. மீண்டும் அனுமதி அளிக்கும் வரை பணிகளைத் தொடர அனுமதியில்லை. ஒருவேளை, சீல் உடைக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கலாம்.
7 மாதம் கடந்து இன்று வரை சீல் வைக்காதது ஏன்?
அமலாக்க நடவடிக்கை எடுக்க உள்ளூர் திட்ட குழுமம் வலியுறுத்தியும் , 7 மாதம் கடந்து இன்று வரை சீல் வைக்காதது ஏன்? அடுத்தடுத்து கால கெடுவுடன் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பின்னணியில் யார்? வேலூர் மாநகராட்சியை முறையான நடவடிக்கை மேற்கொள்ள தயங்குவது ஏன்? அரசியல் அதிகாரம் கட்டுபடுத்துகிறதா? இல்லை பணம் பாதளம் வரை பாயும் என்கின்ற தாரக மந்திரம் செயல்படுகிறதா... என்று மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.
மெத்தனம் காட்டும் அதிகாரிகள்
விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் மீது உடனடியாக "லாக் அண்ட் சீல்" நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் பலர் இதை இழிக்கின்றனர். இது அரசாங்கத்தின் நம்பகத்தன்மை உடைகிறது. அரசு ஆணை வெறும் ஏட்டோடுதான?.
பொதுமக்களின் மீது வரி சுமை
அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டிடங்களால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களின் மீது வரி சுமை கூட இதுவே முக்கிய காரணமாகும்.
அதுமட்டுமின்றி, விதிமீறல் கட்டிடங்களால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இது பல்வேறு விதிமுறைகளை மீறியதால் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு தீங்கினை ஏற்படுத்துகின்றது. இதனால், பொதுமக்களின் வாழ்வில் நேரடியாக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
துறைரீதியான நடவடிக்கை பாயுமா?
விதிமீறிய கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீதான நடவடிக்கை நகராட்சி நிர்வாக இயக்குநர் உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டிஎம்ஏ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அலுவலர்கள், அரசு விதிமுறைகளை அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் அலுவலர்கள் பின்பற்றுகின்றனரா? என கண்காணித்து மக்களுக்காக செயலாற்ற பணிக்க வேண்டும்.
நாளுக்கு நாள் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிப்பு
நாளுக்கு நாள் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்க காரணமாக செயலாற்றுவது அரசியல் வாதிகளும், இடை தரகர்களும்தான் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நீண்ட நாளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
அரசியல் தலையீடு
அரசியல் தலையீடு அரவே ஒழிந்தால்தான் விதிமீறல் கட்டிடங்கள் உருவாவது குறையும், மாநகராட்சிக்கு வருவாய் பெருகும்... அரசியல் தலையீட்டால் ஆளும் கட்சி அரசுக்குதான் அவப்பெயர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...
வீதிமீறல் கட்டிடங்களுக்கு துணைபோகும் கட்சியினர் மீது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இனியாவது விதிமீறல் கட்டிடத்தின் மீது உடனடி நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments
Thank you for your comments