19 விவசாயிகளுக்கு ரூ.20.95லட்சம் மதிப்பில் பயிர்க்கடன்கள் - ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்
காஞ்சிபுரம், ஜூன் 28:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் 19 விவசாயிகளுக்கு ரூ.20.05லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார்,கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு)ராஜ்குமார் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 15 விவசாயிகளுக்கு தக்கைப்பூண்டு விதை,ஆடாதொடை,நொச்சி உள்ளிட்ட வேளாண் பயிர்செடிகள் மற்றும் பசுந்தாள் உர விதைகளை ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 19 விவசாய பயனாளிகளுக்கு ரூ.20,95,792 மதிப்பீட்டிலான பயிர்கடன்களையும் ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை தொடர்பாக விவசாயிகள் பலரும் கொடுத்த கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீர்வு காணுமாறும் ஆட்சியர் பரிந்துரை செய்தார். முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை தொடர்பான கண்காட்சியையும் ஆட்சியர் குத்துவிளகேற்றி திறந்து வைத்தார்.
No comments
Thank you for your comments