உத்தரமேரூரில் வேளாண் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம், ஏப்.11:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சகாயத்தோட்டம் பகுதியில் உள்ள தொன்போஸ்கோ வேளாண்மை கல்லூரியில் 4 வது ஆண்டு பயிலும் மாணவர்கள் உத்தரமேரூர் பேரூராட்சியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து உத்தரமேரூர் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கும்,பள்ளி மாணவர்களுக்கும் வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்குரிமை கிடைத்த விதம் ஆகியன குறித்து விளக்கமளித்தனர்.இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.
வேளாண் அலுவலர் முகுந்தன்,உதவி வேளாண் அலுவலர் ஆனந்தராஜ், வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர் பாலாவிவின் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளித் தலைமை ஆசிரியை சந்தானலட்சுமி வரவேற்று பேசினார்.
வேளாண் கல்லூரி மாணவர்கள் மோகன்,முகிலன், நவீன்,நாகராஜ் உள்ளிட்ட மாணவர்கள் வாக்களிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் பேசினார்கள். மாணவர் சக்திவேல் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments