காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 339 வழக்குகள் சமரசம் - ரூ.10.43 கோடி தீர்வுத்தொகை வழங்கப்பட்டது
காஞ்சிபுரம், மார்ச் 9:
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ப.உ.செம்மல் தலைமை வகித்து மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்து பேசினார்.
சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்,நீதிபதியுமான கே.அருண்சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி பி.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்கு,காசோலை வழக்கு,குடும்ப நல வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மொத்தம் 2290 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவற்றில் 339 வழக்குகளுக்கு சமரசம் செய்து வைக்கப்பட்டு ரூ 10,43,07,051 தீர்வுத்தொகையாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. முதலாவதாக ஒரகடத்தில் கடந்த 8.4.23 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதியதில் உயிரிழந்த மறைமலை நகரைச் சேர்ந்த தீபக்குமார்(27)என்பவரது குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.29 லட்சம் வழங்கியதற்கான காசோலையையும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினார்.
மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவில் வழக்குரைஞர்கள் பத்மனாபன், திருமுருகன், அன்பழகன், வடிவேல் ஆகியோர் உட்பட வழக்குரைஞர்கள், வழக்காடிகள், நீதிமன்றப் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments