தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி - வேல்முருகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு
காஞ்சிபுரம், மார்ச் 9:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் பாலாற்றில் தடுப்பணை கட்ட முயற்சி மேற்கொண்டு வரும் ஆந்திர மாநிலத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டியக்கத்தின் தலைவர் காஞ்சி.அமுதன் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசினார். பாவலர் பூங்குன்றன்,க.சம்பத்குமார்,ரா.நாராயண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆ.மோகன் வரவேற்று பேசினார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்து வரும் நிலையில் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு விரோதமாக பாலாற்றில் ஆந்திரம் தடுப்பணை கட்ட முயற்சிக்கிறது.ஆந்திரா,கேரளா,கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களில் தடுப்பணைகளை கட்டிக் கொள்கிறது.
ஆனால் அதே அண்டை மாநிலங்கள் தமிழக்ததை பாலை வனமாக முயற்சிக்கின்றன. ஆந்திர மாநில அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கி பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கிறது.இதை விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்தாக வேண்டும்.இந்த விஷயத்தில் விவசாயிகளிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும் தி.வேல்முருகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாசறை,செல்வராஜ், சமத்துவ வழக்குரைஞர்கள் சங்க மாநில செயலாளர் த.பார்வேந்தன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.எம்.வெங்கடேசன்,எஸ்.தனபால் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள்,விவசாயிகள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments