தாட்கோ மூலம் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம்
முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் ரூ.40.00 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாவது,
விளிம்பு நிலையிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்களான பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (மருத்துவம்) நிலம் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, ‘முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM-ARISE -Chief Minister’s Adi Dravidar and tRIbal Socio Economic Development Scheme) என்கின்ற பெயரில் ரூ.40.00 கோடி செலவினத்தில் புதிய திட்டமாக செயல்படுத்தப்படும்.
இப்புதிய திட்டத்தின் படி ஆதிதிராவிடர்களுக்கான தனிநபர் திட்டத் தொகையில் முன்விடுப்பு மானியமாக விடுவிக்கப்படும் தொகை 30% சதவீதத்திலிருந்து 35% சதவீதமாக உயர்த்தவும் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 இலட்சம். இதில் எது குறைவானதோ அதை கடன் வழங்கும் வங்கிக்கு வழங்கவும் மற்றும் பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு அல்லது ரூ.3,75,000/- இவற்றில் எது குறைவானதோ அத்தொகையை மானியமாகவும் 6% வட்டி மானியத்தினை அரையாண்டிற்கு ஒரு முறை சம்மந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து பெற்று, ஒத்திவைப்பு காலம் உட்பட முழுவதுமாக திரும்ப செலுத்தும் காலம் வரை வட்டி மானியம் பெறுவதற்கான தகுதிகளின் அடிப்படையில் வழங்கவும் அரசாணை (நிலை) எண். 167 ஆதி(ம)பந (சிஉதி) துறை, நாள்.07.12.2023–இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments