காஞ்சிபுரம் ஸ்ரீ திருவீரட்டானேசுவரர் கோயிலில் பாலாலய பூஜை நடைபெற்றது
காஞ்சிபுரம், நவ.3:
காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவில் அமைந்துள்ள காமாட்சி அம்பாள் சமேத திருவீரட்டானேசுவரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி வெள்ளிக்கிழமை பாலாலய பூஜை நடைபெற்றது.
சித்தர்கள் பலரும் வழிபட்ட பெருமைக்குரியதும்,63 நாயன்மார்களில் ஒருவரான சாக்கியநாயனார் முக்தியடைந்த தலமாகவும் இருந்து வருவது காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத திருவீரட்டானேசுவரர் திருக்கோயில்.காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கேட்டுக்கொண்டதன்படி சென்னை மகாலட்சுமி சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்குவதற்கான யாகசாலை பூஜைகள் கோயில் பரம்பரை அறங்காவலர்களான வி.சண்முகம் குருக்கள்,ஆர்.மகேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன.
கோயில் மூலவர், விநாயகர், ராஜகோபுரம் ஆகியனவற்றுக்கு பாலாலய பூஜை நடைபெற்றது. கோயில் திருப்பணிகளை 6 மாதத்திற்குள் நிறைவு செய்து கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த திட்டமிட்டு அதற்கான திருப்பணிகளை தொடங்கி இருப்பதாக திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments