அதிக வேகம் ஆபத்தானது - காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டிகளுக்கு அதிகாரி அறிவுரை
காஞ்சிபுரம், நவ.8:
காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஆட்டோ,பேருந்து மற்றும் கார் ஓட்டுநர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
உங்கள் கவனத்திற்கு திட்டத்தின் மூலம் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அமைப்பும், டிரேக்ஸ் சாலைப்பாதுகாப்பு அமைப்பும் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தினார்கள்.முகாமை காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கே.பன்னீர்செல்வம் தொடக்கி வைத்து பேசியது..
வாகன ஓட்டுநர்கள் பிற வாகனங்களை முந்துவதற்காக வேகமாகச் செல்லும் போதும்,மிக அதிகமான வேகத்தில் வாகனங்களை இயக்கும் போதும் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன.
சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்கினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பே இல்லை.அதிக வேகம் ஆபத்தானது என்பதை உணர்ந்து வாகனங்களை இயக்க வேண்டும்.
மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் உள்ள பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை உபயோகிக்கக் கூடாது.முக்கியமாக மது அருந்தி வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார்.
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாமை தொடர்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.முகாமில் பங்கேற்ற 125 வாகன ஓட்டுநர்களுக்கும் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை ஆகியனவும் நடத்தப்பட்டது.
30 வாகன ஓட்டுநர்களுக்கு வாட்டர் ஜக் மற்றும் முதலுதவி உபகரணங்கள் ஆகியனவும் வழங்கப்பட்டது. முகாமில் டிரேக்ஸ் சாலைப்பாதுகாப்பு நிறுவனத்தின் திட்ட மேலாளர் எம்.வாசு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments