கர்ப்பிணியாக காட்சியளித்த அம்மன்! - ஓடோடி வந்து பார்த்த ஊர் மக்கள்!!
காஞ்சிபுரம் :
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது பழமையான அன்னை ரேணுகாம்பாள் ஆலயம்.இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு இக்கோயிலில் நவராத்திரி விழா இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.அதனையொட்டி அனுதினமும்,அன்னை ரேணுகாம்பாள் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.
மேலும் அனுதினமும் இரவு பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்த நிலையில், நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் விழாவில் அன்னை ரேணுகாம்பாள் மூலவரும்,உற்சவரும், சீமந்தப்புத்திரி எனப்படும் கர்ப்பிணிப் பெண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர். அதனையடுத்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
அன்னை ரேணுகாம்பாள் கர்ப்பிணிப்பெண்ணாக இருக்கும் போது,குழந்தை வரம் வேண்டி அம்மனிடம் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டால்,பலருக்கும் அது நிவர்த்தியாகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.மேலும் அவ்வாறு ஏற்கனவே குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்த தம்பதியர் தங்களது குழந்தையை எடை தராசில் வைத்து எடைக்கு எடை நாணயம் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்தினர்.
அதேபோல் ஏராளமான பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும்,விரைவில் திருமணமாக வேண்டியும் ஆலயத்தில் கணவன்,மனைவிகள் தம்பதிகளாய் அமர்ந்து பரிகார பூஜைகள் செய்தனர்.
மேலும் சீமந்தப்புத்திரி உற்சவத்தையொட்டி அன்னை ரேணுகாம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
நவராத்திரி விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்,ஆலய விழாக்குழுவின் தலைவர் ஜீவரெத்தினம் தலைமையிலான குழுவினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் செவ்வாய்க்கிழமை அன்னை ரேணுகாம்பாள்,பிள்ளை பெற்ற மகராசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளதோடு இந்த நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments