வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200/-, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/- (மாற்றுத்திறனாளிகள் பொருத்தவரை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ரூ.600/-), 12ஆம் வகுப்பு தேர்ச்சி/ பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/- (மாற்றுத்திறனாளிகள் பொருத்தவரை ரூ.750/-) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600/- (மாற்றுத்திறனாளிகள் பொருத்தவரை ரூ,1000/-) வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற
1) காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித்தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொருத்த வரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்.)
2) பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
3) MBC/BCM/OBC/OC பிரிவினர் 40 வயதிற்குட்பட்டவராகவும், SC/SCA/ST பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை)
4) விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை).
5) ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது.
6) தினசரி மாணவராக கல்வி பயின்று வருவோருக்கு (Regular Student) உதவித்தொகை பெற தகுதியில்லை.
மேற்காணும் அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகைபுரிந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ளவாறு வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட வருமானச் சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
அலுவலக தொடர்பு கொள்ளவேன்டிய தொலைபேசி எண்: 044-27237124 உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பெறப்படும் பரிந்துரைகள் ஏதும் பாதிக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
Post Comment
No comments
Thank you for your comments