நாளை (அக்.14) முதல் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் :

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நாளை (அக்.14 ஆம் தேதி)  முதல் வரும் 26 ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.


மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் பெருமைக்குரியது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் நவராத்திரி உற்சவம் வரும் அக்.14 ஆம் தேதி காலையில் பூர்வாங்க சண்டி ஹோமத்துடனும்,  மாலையில் வாஸ்து சாந்தியுடனும் தொடங்குகிறது. 

மறுநாள் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரக்சாபந்தனம் மற்றும் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. அக்.16 ஆம் தேதி முதல் நவராத்திரி உற்சவத்தையொட்டி தினசரி காலையில் நவாவர்ண பூஜைகளும், மாலையில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கார மண்டபத்திலிருந்து நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளுக்குப் பின்னர் மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளவுள்ளார். நவராத்திரி 9 நாட்களும் தினசரி சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.

அக்.22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவர் காமாட்சி அம்மனும்,துர்க்கையும் அலங்கார மண்டபத்திலிருந்து நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்வதுடன் சூரசம்ஹாரம் பூர்த்தியடைகிறது.

மறுநாள் 23 ஆம் தேதி திங்கள்கிழமை சரஸ்வதி பூஜையும், 24 ஆம் தேதி விஜயதசமி சிறப்பு தீபாராதனையும்,நவாவர்ண பூஜை பூர்த்தியும் நடைபெறுகிறது. 

அக்.25 ஆம் தேதி கலசாபிஷேகமும், அக்.26ஆம் தேதி இரவு உற்சவர் காமாட்சி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தோடும் நவராத்திரி உற்சவம் நிறைவு பெறுகிறது.நவராத்திரியையொட்டி தினசரி தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தினரால் நித்ய வேதபாராயணமும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர்,கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன்,கோயில் மணியம் சூரியநாராயணன் ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள்செய்து வருகின்றனர்.

படவிளக்கம்}சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன்(கோப்புப்படம்)

No comments

Thank you for your comments