Breaking News

காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை... உறவினர்கள் சாலை மறியல்

அரக்கோணம், செப். 14-

அரக்கோணத்தில்  காதலித்து பதிவு திருமணம் செய்த கணவன்  கார் மற்றும் 50 சவரன் நகை வரதட்சணையாக கேட்டு  கொடுமைப்படுத்தியதால்  6 மாதத்தில் மனைவி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.


தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரி

கணவன் உட்பட மூன்று பேரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ராஜேஸ்வரி (24). இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு ஆவடியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வந்தார்.

அரக்கோணத்தில் இளம்பெண் தற்கொலைக்கு நீதி கேட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் சாய் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்கிற தீபனை (26)  கடந்த 4  ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 23ம் தேதி சென்னை பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு மேல்பாக்கத்தில் உள்ள கணவர் வீட்டில் ராஜேஸ்வரி வாழ்ந்து வந்தார்.  திருமணம் முடிந்த  ஒரே மாதத்தில் தாய் வீட்டுக்கு வந்த ராஜேஸ்வரி,  என்னுடைய மாமனார் செல்லையா மற்றும் மாமியார் ஆகியோர் 50 சவரன் நகை மற்றும் சீர்வரிசை கொண்டு வா என்று  தொந்தரவு செய்கின்றனர். 

மேலும் வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டினர்.  இந்நிலையில் காதல் கணவரான ஸ்டீபனும் வரதட்சணையாக கார் வாங்கி வருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதில் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஸ்வரி தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது  அவர்  ஒரு மாதம் கர்ப்பமாகவும்  இருந்தார்.

இந்நிலையில் கடந்த 1ம்  தேதி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ராஜேஸ்வரி புகார் கொடுத்தார். 

போலீசார் சிஎஸ்ஆர் கொடுத்து விசாரித்து வந்தனர் . இந்நிலையில் ஸ்டீபனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

மேலும் ராஜேஸ்வரியுடன்  காதல் கணவனான ஸ்டீபன் பேசுவதையும் தவிர்த்து வந்தார். மாமனார்,  மாமியாரும் தங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்று ராஜேஸ்வரியை அசிங்கமாக திட்டி அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று  காலை 9.45 மணிக்கு திடீரென ராஜேஸ்வரி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . ஆனால் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராஜேஸ்வரியின் உறவினர்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் டிஎஸ்பி (பொறுப்பு)  பிரபு மற்றும் போலீசார் மறியல்  நடத்தியவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். அதைத்தொடர்ந்து ராஜேஸ்வரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்த மறியல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது . அதன்பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.  இச்சம்பவங்கள் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


No comments

Thank you for your comments