அருணாச்சலேஸ்வரர் யானைக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணி தொடக்கம்
திருவண்ணாமலை, செப். 14-
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் யானைக்கு வட ஒத்தவாடை தெருவில், ரூ.49 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.
பின்பு நிருபர்களிடம் தெரிவித்தாவது :-
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் யானை ருக்கு கடந்த 2018-ம் ஆண்டு இறந்தது. யானை ருக்குவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு யானைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் படி அருணாச்சலேசுவரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே வட ஒத்தவாடை தெருவில் ரூ.49 லட்சம் மதிப்பில் 400 சதுரஅடி பரப்பளவில் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சனம், அருணாசலேசுவரர் கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments
Thank you for your comments