உத்திரமேரூர் ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புலிவனம், மலையங்குளம் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து இன்று (02.08.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், திருப்புலிவனம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டு, அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு மேற்கொண்ட பின்பு திருப்புலிவனம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் திருப்புலிவனம் கூட்டுச்சாலையில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மலையங்குளம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பழங்குடியினர் மக்களுக்கு 178 குடியிருப்புகள் ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
இவ் ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.கோபிநாத், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments