நாடாளுமன்ற நிலைக்குழுவினர் காஞ்சிபுரம் கோயில்களில் தரிசனம்
காஞ்சிபுரம், ஆக.28:
நாடாளுமன்ற நிலைக்குழுவைச் சேர்ந்த 11 எம்பிக்கள் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
அத்திவரதர் புகழ் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழுவைச் சேர்ந்த எம்பி க்களான நாமக்கல்லை சேர்ந்த ஏகேபி சின்னராஜ் மற்றும் கீதாபென்,தலாரி ரெங்கையா, நரேந்திரகுமார், முகம்மது ஜாவித் உட்பட 11 எம்.பி க்கள் காஞ்சிபுரம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலுக்கு வந்த அவர்களை கோயில் நுழைவு வாயிலில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன்பாரதி, கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் மற்றும் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
கோயிலில் மூலவர்,தாயார் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்த பிறகு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பிறகு காஞ்சிபுரம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தனர்.
வரும் வழியில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம் அரசுப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட சமையல் கூடத்தையும் அவர்கள் பார்வையிட்டதாகவும் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments