காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றும் பணிகளை பொதுக் கணக்குக் குழுவினர் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று (28.08.2023) ஆரம்ப சுகாதார நிலையம், யுண்டாய் கார் தொழிற்சாலை, மேம்பால பணிகள், தனியார் கல்குவாரி மற்றும் அரசு தலைமை மருத்துவமனையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத் தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கினார்கள். திருப்பெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள யுண்டாய் கார் தயாரிப்பு தொழிற்சாலையினை பார்வையிட்டு, கார் உற்பத்தி செய்யும் தொழில் கூடத்தினை ஆய்வு மேற்கொண்டனர். பின்பு படப்பையில் மேம்பாலம் கட்டும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சேத்துப்பட்டு ஊராட்சியில் உள்ள தனியார் கல்குவாரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் MRI ஸ்கேனிங் மையம், டிஜிட்டல் எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், வெளிப்புற நோயாளிகளின் வருகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழுத்தலைவர் மாண்புமிகு திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு 2023-2024 தணிக்கைப்பத்திகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் அரசு அலுவலர்களுடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழு உறுப்பினர்கள் போtர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன், பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி, மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சி.சரஸ்வதி, பரமத்தி-வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சேகர், திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்புச் செயலாளர் திரு.ஜெ.பால சீனிவாசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments