வாழ்ந்து காட்டுவோம் திட்ட விளக்கக் கூட்டம் - கையேடு வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானியத் திட்ட விளக்கக் கூட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்விமோகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (23-08-2023) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்விமோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 2 வட்டாரங்களில் உள்ள 101 கிராம ஊராட்சிகளில் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், தொழில் முனைவுகளுக்கான நிதி வழி வகைகளை ஏற்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் சிறப்பு அம்சமான இணை மானியத் திட்டம் குறித்த பயிற்சியானது வங்கியாளர்கள், வட்டார மற்றும் மாவட்ட பணிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
இணை மானியத் திட்டம் விளக்கக் கையேட்டுப் பிரதியினையும் வெளியிட்டு தமிழக அரசின் சீரிய திட்டமான வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் 30 சதவீத மானியத்துடன் கடனுதவி கிடைக்கும் இணை மானியத் திட்டத்தினைக் குறித்து அதிக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகமான நபர்களை இத்திட்டத்தில் இணையச் செய்ய வேண்டும். மேலும், வங்கியாளர்களும் கடனுதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதணை தொடர்ந்து ஒரு பயனாளிக்கு ரூ. 3 இலட்சத்திற்கான இணை மானியத் திட்டக் கடனுதவிக்கான காசோலையையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் 138 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12.9 கோடி அளவில் கடனுதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், திரு.சா. செல்வக்குமார், உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி சங்கீதா, இ.ஆ.ப., மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திரு. க.இ. ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வங்கி பிரதிநிதிகள் பணியாளர்கள் மற்றும் தொழில் சார் சமூக வல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments