Breaking News

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ரூ.  9,00,000/- (ரூபாய் ஒன்பது லட்சம் மட்டும்) மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை மாவட்ட  ஆட்சித் தலைவர்  திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (21.08.2023) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 284 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், வருமானம் ஈட்டும் தாய் / தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் மாணவ/ மாணவியருக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.75,000/- வீதம்  10 மாணவ/ மாணவியருக்கு குறித்த கால வைப்புத் தொகைக்கான ரூ.7,50,000/-க்கான பத்திரங்களும் மற்றும் வாலாஜாபாத் வட்டம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பயனாளிக்கு தலா ரூ.50,000/-க்கான  தொழிற்கல்வி உதவித்தொகையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பாபு,  காஞ்சிபுரம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.ரா.சுமதி, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. வெ. வெற்றிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments