Breaking News

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில்,  வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம்,  பயனடைந்தவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்கள்.


வாழ்ந்து காட்டுவோம் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகை செய்தல் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். 

இத்திட்டமானது 31 மாவட்டங்களில் 120 ஒன்றியங்களில் 3994 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டாரத்திலுள்ள 40 கிராம ஊராட்சிகளிலும் வாலாஜாபாத் வட்டாரத்தில் உள்ள 61 கிராம ஊராட்சிகளையும் சேர்த்து 101 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 



கடன் செயலி (LOAN APP) மோசடி 

சுய உதவிக் குழு பெண்கள், ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் முக்கிய இலக்கு ஆவார். வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத துறைகளின் உற்பத்தியாளர்கள் பயனாளிகள் ஆவர்.

இணை மானிய நிதித் திட்டம்:

இணை மானிய நிதி  திட்டமானது, கிராமப் பகுதியில் தொழில் முனைவுகளை ஊக்குவிக்கவும், கடன் பெற்றவர்கள் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்துவதை ஊக்கப்படுத்திடவும், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தொழில்களுக்கான கடன் தொகையினை விரைவாக வழங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடன் தொகையில் 30% மானியம் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 65 நபர்கள் ரூ.72.78 இலட்சம் வரை மானியம் பெற்றுள்ளனர்.

உற்பத்தியாளர் குழு:

உற்பத்தியாளர்கள் குழுவாக ஒன்றிணைந்து உற்பத்தித் திறனை அதிகரித்தல், உபரி விளைப் பொருட்களை ஒன்று திரட்டுதல், இதர கூட்டு நடவடிக்கைகளுக்காக ஒன்றிணைந்து உற்பத்தியாளர்களின் வருமானம் மற்றும் இலாபத்தை அதிகரிக்கும் வகையில் குறிப்பிட்ட பொருளுக்காக அல்லது துணைப் பொருளுக்காக செயல்படுபவை ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 71 உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டு ஒரு குழுவிற்கு தலா ரூ.75000 வீதம் ரூ.53.25 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

நுண் தொழில் நிறுவன நிதி:

கோவிட்-19 சிறப்பு நிதி உதவித் தொகுப்பில் வழங்கப்பட்ட கடன் தொகையினை திரும்ப செலுத்துவதன் மூலம் பெறப்பட்ட நிதியை நுண் தொழில் நிறுவனங்களுக்கான கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நுண் தொழில் நிறுவனம் மேம்பாடு அல்லது உருவாக்கத் தேவைப்படும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கும். இத்திட்டமானது கடந்து 28.06.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 133 பயனாளிகளுக்கு ரூ.66.50 இலட்சம் அளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மதி சிறகுகள் தொழில் மையம்:

மதி சிறகுகள் தொழில் மையம் என்பது ஊரகத் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு தேவையான சேவைகளை அல்லது ஆலோசனைகளை ஒரே இடத்தில் வழங்கும் சேவை மையம் ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இம்மதி சிறகுகள் தொழில் மையம் செயல்பட்டு வருகிறது.

தொழில் குழு:

தொழில் குழு என்பது ஒத்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் இலாப நட்டங்களை தங்களுக்குள்ளாக பகிர்ந்து அனைத்து தொழில் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துகிற கூட்டு உரிமையைக் கொண்ட உறுப்பினர்களின் குழுவாகும். ஒரு தொழில் குழுவின் குறிக்கோள் என்பது உற்பத்தி செலவுகளை குறைத்தல், தரத்தை மேம்படுத்துதல் மற்றும் கூட்டு முயற்சி மூலம் வருவாயை அதிகரித்தல் ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 10 தொழில்குழுக்களுக்கு ரூ.7.5 இலட்சங்கள் துவக்க நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

சமுதாயத் திறன் பள்ளிகள்:

ஊரகப் பகுதிகளில் நெசவுத் தொழில், உலோகப் பணிகள், ஓவியம் தீட்டுதல், மண்பாண்டங்கள், கூடை மற்றும் பாய் முடைதல் போன்ற சில பாரம்பரிய மற்றும் அதிக வருமானம் தரும் திறன்களுக்கு அதிகத் தேவை உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக அத்தகைய அனுபவமுள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களைப் பயிற்றுநர்களாகப் பயன்படுத்தி ஆர்வமுள்ள உள்ளூர் மக்களுக்குப் பயிற்சியளித்து வேலைவாய்ப்பினை உருவாக்க சமுதாயத் திறன் பள்ளிகள் ஏற்படுத்தப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது வரை 50 சமுதாயத் திறன் பள்ளிகள் ரூ. 36.43 இலட்சங்கள் நிதியில் நடத்தப்பட்டுள்ளன.

சமுதாயப் பண்ணைப் பள்ளிகள்:

இத்திட்டத்தின் மூலமாக வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய துணைத் துறைகளில் சுய தொழிலுக்கான  தொழில்நுட்ப  சேவை வழங்கும் முன்னோடி உற்பத்தியாளர்களைக் கண்டறிந்து பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் மூலம் விவசாயம் சார்ந்த தொழிலில் உள்ள திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து, அதன் தீர்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப அனுபவ அறிவை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது வரை 181 சமுதாயப் பண்ணைப் பள்ளிகள், பள்ளிகள் ரூ. 167.06 இலட்சங்கள் நிதியில் நடத்தப்பட்டு வருகின்றன.

வாலாஜாபாத் வட்டம், கிதிரிப்பேட்டை ஊராட்சி சார்ந்த திருமதி. கவிதா என்பவர் கூறுகையில்:


எனது பெயர் கவிதா நான் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் கிதிரிப்பேட்டை என்னும் ஊராட்சியில் வசித்து வருகிறேன். எனது குடும்பம் விவசாயத்தை நம்பியுள்ளது. என்னுடைய திருமணத்திற்குப் பிறகு 2 குழந்தைகளுடன் எந்த ஒரு தொழிலும் தெரியாமல் இல்லத்தை மட்டும் கவனித்து வந்தேன். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் இருந்து அலுவலர்கள் சந்தித்தனர். எங்கள் கிராம விவசாயிகளை ஒன்றிணைத்து உற்பத்திக் குழு ஒன்றிணை அமைத்தனர். எங்களைப் போன்ற விவசாயிகளை பல குழுக்களாக அமைத்து, குழு மூலம் விவசாயத்தினை மேம்படுத்துவதற்கான இடுபொருள்கள் கால்நடைகளுக்கான தீவனம் போன்றவை விவசாயிகள் பெறுவதற்கு வழி நடத்தினர். 

எங்களைப் போன்று அமைக்கப்பட்ட உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து வேகவதி உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லிமிடெட் என்ற உற்பத்தியாளர் கூட்டமைப்பு 01.04.2022 அன்று துவக்கப்பட்டது. தற்போது இக்கூட்டமைப்பில் 5609 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 1958 நபர்கள் தலா ரூ.1000 கொடுத்து பங்குதாரர்களாக உள்ளனர். 

செயல்குழு என்னை நிறுவனத்தின் பெருந்தலைவராகத் தேர்வு செய்தது. தற்போது வாழ்ந்து காட்டுவோம் மூலம் ரூ. 10 இலட்சம் மானியம் கடலை மிட்டாய் தயாரிக்கும் அலகு துவங்குவதற்கும், எண்ணெய் டின்கள் வாங்குவதற்கும், மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் பெறப்பட்டது. எதிர்காலத்தில் பாலில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்களான பன்னீர், நெய் போன்றவை தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறோம். இது போன்று சாதாரண நிலையில் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாத நிலையில் இருந்த எங்களை ஒரு நிறுவனத்தில் கொண்டு வந்து அந்த நிறுவனத்தில் எங்களைப் பொறுப்பாளர்களாக உருவாக்கி செயல்பட வைத்து எங்களைப் போன்று பல உழவர்களின் குடும்பத்தினை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு:

திரு.க.இராமச்சந்திர பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

திரு.எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments