மயிலம் ஆதீன மடத்துக்கு சொந்தமான ரூ.48 லட்சம் மதிப்புள்ள சொத்து மீட்பு - அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
காஞ்சிபுரம், ஜூன் 28:
காஞ்சிபுரம் பாலையர் மேடு பகுதியில் உள்ள மயிலம் பொம்மபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான ரூ.48 லட்சம் மதிப்பிலான சொத்து அறநிலையத்துறை அதிகாரிகள் மூலமாக புதன்கிழமை மீட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம் காஞ்சிபுரம் கிளைக்கு சொந்தமான இடம் காஞ்சிபுரம் பாலையர்மேடு ஒத்தவாடை தெரு பகுதியில் இருந்தது.
1218 சதுர அடி அளவுள்ள ரூ.48லட்சம் மதிப்புள்ள இந்த இடத்துக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கொடுக்காமலும், இடத்தை ஆக்கிரமித்தும் ஹரிதாஸ் என்பவர் இருந்து வந்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரம் சரக அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் சொத்தை மீட்குமாறு ஆலய நிர்வாகங்கள் பிரிவு தனி வட்டாட்சியர் ராஜனுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர்கள் ந.தியாகராஜன், அமுதா, பூவழகி, ஆய்வாளர் பிரித்திகா மற்றும் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை ஹரிதாஸிடமிருந்து மீட்டு பூட்டி சீல் வைத்தனர்.
இதனையடுத்து ஜெசிபி இயந்திரம் மூலம் அந்த சொத்தை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.
இந்நிகழ்வின் போது மயிலம் பொம்மபுரம் ஆதீனத்தின் அதிகாரம் பெற்ற அலுவலர் ராஜீவ்குமார் ராஜேந்திரன், மேலாளர் சந்தானம், காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேசுவரன், துணை வட்டாட்சியர் ஹரி ஆகியோர் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments