மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.10,25,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.10,25,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (03.04.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 270 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி எஸ்.வினோத் என்பவர் மளிகை கடை வைக்க கூட்டுறவுத்துறை சார்பில், வையாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.50,000/-க்கான காசோலையினையும், உத்திரமேரூர் வட்டம், சிறுபினாயூர், கிளக்காடி, பேரணக்காவூர், அகரம் துளி, நாஞ்சிபுரம் மற்றும் காரணை ஆகிய கிராமத்தை சார்ந்த 13 பயனாளிகளுக்கு ரூ.9,75,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற திருமதி.லதா, செல்வி.சங்கீதா ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.ரா.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments