வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
வாலாஜாபாத், மார்ச்.27-
வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் எம்டி. அஜய்குமார் தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி மன்றங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அதனை எவ்வாறு அரசிடம் கேட்டு அனுமதி பெற்று முன்னோடியாக செயல்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், பி.எம்.ஜி.ஏ.ஓய் மத்திய அரசு திட்ட பணிகள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் நிறைவேற்றக்கூடிய நடவடிக்கைகளை அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும், மாநில நிதிக்குழு மானியம் காலதாமதம் இன்றி வழங்கப்பட வேண்டும்,
ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட வேண்டும், ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை பணிகளின் போது பாதிக்கப்படும் மின் விளக்கு கம்பங்கள் குடிநீர் குழாய்களை நெடுஞ்சாலை துறையே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக சரி செய்து ஒப்படைக்க வேண்டும்,
கிராம வளர்ச்சிக்கு அர்ப்பணிப்போடு பாடுபடும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் இடையூறு மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து ஊராட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்,
நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நடத்தப்படுவதை தவிர்த்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அரசு நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நடத்தப்பட வேண்டும்,
ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், மக்கள் நலப் பணியாளர் காலிப்பணியிடங்களை அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களே நிரப்பிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்,
ஊராட்சி செயலாளர் பணியிடம் காலியாக உள்ள ஊராட்சிகளில் உடனடியாக நிரப்பப்பட வேண்டும், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் மாறுதல் செய்யப்பட வேண்டும், ஊராட்சி மன்றத் தலைவரின் பணிகளுக்கு இடையூறு ஏற்ப்படுத்தும் பணியாளர்களையும் மாற்றம் செய்யப்பட வேண்டும்,
ஊராட்சி மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் கோரப்படும் பணிகள் கால தாமதமின்றி மதிப்பீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட வேண்டும்,
மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான பணிகளையும் அவர்கள் முழுமையாக ஊராட்சிகளில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டமைப்பின் செயலாளர் வள்ளியம்மாள் செல்வம், பொருளாளர் லெனின் குமார், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களான உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments