குளக்கரை ஓரங்களில் கொட்டப்படும் காலாவதியான மாத்திரை மருந்துகள் - கண்டுகொள்ளாத பேரூராட்சி
கோவை :
பேரூர் பெரியகுளத்தின் கரையில், தனியார் மருந்துக்கடையின் மருந்து மற்றும் மாத்திரைகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளன.
பேரூரிலிருந்து புட்டுவிக்கி ரோட்டிற்குச் செல்லும் வகையில், பேரூர் பெரியகுளத்தின் கரையில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தின் கரையில், காலாவதியான மருந்து மற்றும் மாத்திரைகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளன. கோவையின் பல பகுதிகளில் மருந்துக்கடைகள் வைத்துள்ள ஒரு நிறுவனத்தின் மூட்டைகள் என்பதற்கு ஆதாரமாக சில ரசீதுகளும் அதில் இருந்துள்ளன.
காலாவதி மருந்தைக்கொட்டி, நீர்நிலைக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பேரூராட்சி அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார், அந்த மருந்துக்கடை நிர்வாகத்தினரை அழைத்து எச்சரித்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகம், மருந்துக்கடைக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
பேரூர் பேரூராட்சி செயல்அலுவலர் மணிகண்டனிடம் கேட்டபோது, ''இதுபற்றி போலீசில் புகார் அளித்ததும், 'இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம்' என, தனியார் மருந்து கடையினர் எழுதி கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பேரூராட்சி சார்பில், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. அவர்கள் கொட்டிய மருந்துகளையும் அவர்களே எடுத்துச் செல்லவும் கூறியுள்ளோம்,என்றார்.
இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், 'நீர் நிலைகளில் காலாவதியான மருந்துகளை கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுத்துவதை, ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்துள்ளோம்.
ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தினர் பெயரளவுக்கு மட்டும் அபராதம் விதித்துள்ளனர்; அதிகபட்ச அபராதம்விதித்துள்ளனர்; அதிகபட்ச அபராதம் விதிப்பதுடன் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் அளிக்கவுள்ளோம்,' என்றனர்.
No comments
Thank you for your comments