Breaking News

நரிக்குறவர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விற்பனை வணிக வளாகம் - நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானனோர் நாடோடிகளாக சுற்றிச் திரிந்து பாசி மணிகள், மணிமாலைகள், சீப்புகள், வளையல்கள் போன்றவற்றை பேருந்து நிலையங்களிலும், கிராமங்களிலும், திருவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறம் இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திருப்பெரும்புதூர் ஒன்றியம், நெமிலி ஊராட்சியில் உள்ள 40 நரிக்குறவர் குடும்பங்கள் தேர்ந்தெடுத்து, அதில் 20 நபர்கள் ஒன்றிணைத்து, மகளிர் திட்ட வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் மூலம் ஒரு சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு, அக்குழுவிற்கு குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனியார் நிறுவனத்தின் மூலம் 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக மகளிர் திட்டம் நபார்டு வங்கி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைத்து கழிவு பட்டு நூலினால் ஆன வளையல்கள் மற்றும் ஆபரணங்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இம்மகளிர் சுய உதவிக்குழுக்களால் செய்யப்படும் ஆபாரணங்கள் பட்டு சேலை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவு பட்டு நூல்கள் கூட்டுறவு துறை, கைத்தறித்துறை மகளிர் திட்ட மூலமாகவும் குழுக்களுக்கு இலவசமாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் நடைபெறும் கண்காட்சிகளிலும் இக்குழுக்கள் உற்பத்தி செய்யும் ஆபரணங்கள் விற்பனை செய்து அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு நிரந்தரமாக விற்பனை வணிக வளாகம் ஒன்று பூமாலை வணிக வளாகம் என்ற பெயரில் திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டு, 08.02.2023 அன்று மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறந்து வைத்து, உற்பத்தி பொருட்களை அந்த இடத்தில் விற்பனை செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், நெமிலி ஊராட்சியில்  வசிக்கும் ஸ்னேகா அவர்கள் கூறியதாவது:

✸ வணக்கம். என்னுடைய பெயர் ஸ்னேகா.  நான் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவள். நானும் என்னுடைய இனத்தைச் சேர்ந்தவர்களும் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், நெமிலி ஊராட்சியில் காரந்தாங்களில் வசித்து வருகிறேன்.

✸ எங்களுக்கு சொந்தமாக எங்கள் பொருட்களை விற்பனை செய்ய ஒரு இடம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தோம்.

✸ நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 20 நபர்கள் ஒன்று சேர்ந்து மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, பயிற்சி அளித்து திருப்பெரும்புதூர் பேருந்து நிலையத்தில் எங்களுக்கு வணிக வளாகம் அமைத்து கொடுக்கப்பட்டது. இவ்வணிக வளாகம் மூலம் நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்து எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழிவகுத்து தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு:

திரு.க.இராமச்சந்திர பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

திரு.எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments