குடிநீர் தொட்டிக்குள் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் ஆண் சடலம்... அனைத்து கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கோரிக்கை
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் 1000-த்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மூன்றாவது மகனான சரவணகுமார் (வயது - 35) கடந்த 9 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும், பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால் அவர் கிடைக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு, வரக்கூடிய குடிநீரில், துர்நாற்றம் வீசுவதாக அக்கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் இன்று புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் ஊராட்சி நிர்வாகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்று உள்ளனர்.
அப்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக, மேலே சென்று பார்த்தபோது, குடிநீர் தொட்டிக்குள், துர்நாற்றத்துடன், அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில், தீயணைப்பு துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முதலில் நீர்த்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றிவிட்டு, தொட்டியில் அழுகிய நிலையில் கிடக்கும் சடலத்தை, கயிறுகள் கட்டி மீட்கும்பணி தற்போது நடைபெற்றது.
முதற்கட்ட விசாரணையில், நீர்த்தேக்கத் தொட்டில் சடலமாக கிடப்பது, கடந்த ஒன்பது நாட்களாக காணாமல் போன சிவசங்கரின் மகன் சரவணக்குமார் (வயது-35) என்பது தெரியவந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல், கடந்த 9 நாட்களாக, சம்பந்தப்பட்ட நீர் தேக்கத் தொட்டியின் குடிநீரை தான், அக்கிராமத்தில் உள்ள அனைவரும் உணவு சமைப்பதற்காகவும், குடிநீராகவும் பயன்படுத்தி உள்ளனர்.
மேலும் சடலமாக உள்ள சரவணக்குமார், நீர் தேக்க தொட்டியில் தற்கொலை செய்து கொண்டாரா...? அல்லது கொலை செய்யப்பட்டாரா...? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 9 நாட்களாக நீர்த்தேக்க தொட்டியில் சடலம் கிடந்துள்ள நிலையில், அந்தத் தொட்டியில் இருந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்திய உள்ளதால், மருத்துவக் குழு அமைத்து அக்கிராம மக்களை பரிசோதனை செய்ய வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்டியலின மக்கள் வசியக்கூடிய நீர்த்தேக்க தொட்டியில், அழுகிய நிலையில் சடலம் கிடக்கும் சம்பவத்தால், ஊர் பொதுமக்கள் உறவினர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்து வருவதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



No comments
Thank you for your comments