காஞ்சிபுரத்தில் மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 276 வழக்குகளில் ரூ.9.42 கோடி தீர்வுத்தொகை
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 276 வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டு ரூ.9.42 கோடி தீர்வுத்தொகையாக வழக்காடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு)பி.சிவஞானம் தலைமையில் கூடியது. நீதிபதிகள் பி.திருஞானசம்பந்தம்,சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி வரவேற்று பேசினார்.மோட்டார் வாகன விபத்து வழக்குகள்,வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு ஆகியன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 276 வழக்குகள் விசாரித்து சமரசம் செய்து வைக்கப்பட்டது.இதன் மூலம் தீர்வுத்தொகையாக வழக்காடிகளுக்கு ரூ.9,42,98,234 வழங்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்களான திருவள்ளூரை சேர்ந்த கிரிதரன்குடும்பத்தினரிடம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.73 லட்சத்துக்கான காசோலையும், அனுமன் தண்டலம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் குடும்பத்தினரிடம் ரூ.47.74 லட்சத்துக்கான காசோலையையும் மாவட்ட நீதிபதி(பொறுப்பு) பி.சிவஞானம் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது விரைவு நீதிமன்ற அரசு வழக்குரைஞர் தி.சத்தியமூர்த்தி, எஸ்.துரைமுருகன், பாலமுருகன் ஆகியோர் உட்பட வழக்குரைஞர்கள் பலரும் உடன் இருந்தனர். முன்னதாக மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவில் வழக்காடிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments