குப்பை இல்லாத நகராக மாற்ற ஒத்துழைப்பு தரவும்... காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
காஞ்சிபுரம், ஜன.10-
காஞ்சிபுரம் மாநகராட்சியை குப்பை இல்லாத நகராக மாற்றுவதற்கு வணிகர்களும்,பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆணையர் ஜி.கண்ணன் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் வணிகர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் குப்பை இல்லாத காஞ்சிபுரத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் துணைத் தலைவர் மோதிலால்,செயலாளர் ஏ.வேலுமணி,கூடுதல் செயலாளர் ஏ.சி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரயில்வே சாலையில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வணிகர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் வழங்கினார்.பின்னர் ஆணையர் அவர்களிடம் பேசியது..
தினசரி கடைகளில் சேரும் குப்பைகள் மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி வாகனம் வரும் போது வணிகர்கள் கொடுத்து உதவலாம்.மக்கும் குப்பை உரமாகவும்,மக்காத குப்பை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.குப்பைகள்,கழிவுகளை கண்ட இடங்களில் போடுவதால் மாநகராட்சியை பற்றி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளிடம் நன்மதிப்பு கெடும்.சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கும்.
இவ்விஷயத்தில் வணிகர்களும்,பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.வரவிருக்கும் போகிப்பண்டிகையை புகையில்லாத போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்.
பழைய குப்பைகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு குப்பைகளை எரிக்காமல் அதை மாநகராட்சி வண்டிகளில் ஒப்படைக்குமாறும் ஆணையர் ஜி.கண்ணன் கேட்டுக்கொண்டார்.



No comments
Thank you for your comments