தைமாத அமாவாசை காஞ்சி வரதராஜ சுவாமி வீதியுலா
காஞ்சிபுரம் ,ஜன.21-
தைமாத அமாவாசையையொட்டி சனிக்கிழமை ஸ்ரீதேவி,பூதேவியருடன் காஞ்சிபுரம் வரதராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் தைமாத அமாவாசையையொட்டி ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் திருமலையிலிருந்து கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி அங்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
மாலையில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலிலிருந்து கேடயத்தில் திருவடிக்கோயிலுக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்றன.பின்னர் மாட வீதிகளில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. ஆந்திர மாநில பக்தர்கள் உட்பட திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மேனாபெட்டியில் அலங்காரமாகி ஓரிக்கை, சின்ன ஐயங்கார் குளம் மண்டகப்படிகளில் சேவை சாதித்து பின்னர் களக்காட்டூர் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருள்கிறார்.
பின்னர் நண்பகல் அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் மகாபெரியவர் மணிமண்டபம் அருகே பாலாற்றங்கரைக்கு எழுந்தருளி அங்கு அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படியில் தங்கி சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
இந்நிகழ்வு வனபோஜனம் எனப்படுகிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதியுலாவாக வந்து தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி அங்கு மாலைமரியாதை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சந்நிதிக்கு எழுந்தருள்கிறார்.

No comments
Thank you for your comments