பெண் ஊழியரிடம் அநாகரிகம்.. கோயில் செயல் அலுவலரால் சர்ச்சை
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலராக பணிபுரியும் வேதமூர்த்தியின் செயல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த உலகப் புகழ்பெற்ற கோயில்களும் , திவ்ய தேசங்களும் அமைந்துள்ளது. நாள்தோறும் லட்சம் கணக்கான மக்கள் தரிசனம் மேற்கொள்ள தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களும், வெளிநாட்டு பக்தர்களும் , சுற்றுலா ஆர்வலர்களும் என வந்து பல்வேறு திருக்கோயில்களை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் திருக்கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் கட்டுப்பாட்டில் செயல் அலுவலர்கள் கோயில் செயல்பாடுகளை நாள்தோறும் கண்காணித்து செயல்பட்டு வருகின்றனர்.
கோயிலின் துப்புரவு பணி, அன்னதான கூட பணிகளுக்கு என திருக்கோயில்களில் ஆண் பெண் ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் திருக்கோயில் செயல் அலுவலகத்திலும் பல்வேறு நிலைகளில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இத்திரு கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு குறிப்பாக வட மாநில பக்தர்கள் அதிக அளவில் திருக்கோயிலைக் கண்டு தரிசிப்பது வழக்கம்.
இத்திரு கோயில் குடமுழுக்கு பணிகளுக்கான முதற்கட்ட பணிகள் தற்போது துவங்கி அதற்கான ஆய்வுகளும் அவ்வப்போது திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று கூட திருக்கோயிலின் கோபுரத்தை தொன்மை வாய்ந்த வகையில் அப்படியே புனரமைக்கும் வகையில் அதற்கான வடிவமைப்புக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி திருக்கோயிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் வேதமூர்த்தி, செயல் அலுவலகத்தில் திருக்கோயில் பெண் ஊழியரிடம் முறைகேடாக நடக்க முயற்சித்ததாகவும், அநாகரிகமாக செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அந்த பெண் ஊழியர் அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இச்செயல் அனைத்தும் அங்கிருந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோயில் வளாகத்தில் செயல் அலுவலகத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்ட செயல் அலுவலரினை செயலை இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகம் கண்டிக்க வேண்டும் எனவும், இது போன்ற மனநிலை உடைய நபர்களுக்கு பணி வழங்கக் கூடாது எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த செயல் அலுவலர் ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்த போது இதே போன்று சர்ச்சையில் சிக்கினார். மேலும் இவர் பணிபுரியும் திருக்கோயில்களில் எப்போதுமே இவர் மீது அதிக அளவில் குற்றம் சாட்டப்படுவது வழக்கமாக உள்ளது.
பல்வேறு திருக்கோயில்கள் பணிபுரியும் செயல் அலுவலர்கள் கண்ணியமாக நடந்து கொள்ளும் போது இது போன்ற நபர்களை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் இந்து பக்தி ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இச்செயல் குறித்த வீடியோ பதிவும் திருக்கோயில் அலுவலகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments
Thank you for your comments