தொழில் முனைவோர்களுக்கு இணை மானியத் திட்டத்தின் கீழ் கடனுதவி காசோலை வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களிலுள்ள 23 தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் இணை மானியத் திட்டத்தின் கீழ் வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட ரூ.87,50,000/- கடன்தொகைக்கான காசோலை வழங்கினார்கள்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதியுதவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாயப்புகள் உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளை நோக்கமாக கொண்டது. இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களைச் சேர்ந்த 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் முக்கிய கூறாக, இணை மானியத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளிலுள்ள தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களின் தொழில் மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களிலுள்ள 23 தொழில் முனைவோர்களுக்கு 08.12.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இணை மானியத் திட்டத்தின் கீழ் வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட ரூ.87,50,000/- கடன்தொகைக்கான காசோலை வழங்கினார்கள். இந்த 23 தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானியமாக ரூ.28,45,000/- விடுவிக்கப்பட்டது.
இணை மானியத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தி சிறப்பான முறையில் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என தனது வாழ்த்துக்களையும், வங்கிகள் மூலம் பெறப்படும் கடன் தொகையினை தவணை தவறாமல் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் திரு.எம்.தினகர் ராஜ்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments