காஞ்சிபுரத்தில் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்
காஞ்சிபுரம்,டிச.2
காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலுக்கு புதியதாக வள்ளி,தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி உற்சவர் சிலைகள் புதியதாக வாங்கப்பட்டு வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக சிவன் மற்றும் சுப்பிரமணியர்சுவாமி சிலைகளும் உள்ளன. இக்கோயிலுக்கு புதியதாக உற்சவர் சுப்பிரமணியசுவாமி மற்றும் வள்ளி,தெய்வானை திருஉருவ ஐம்பொன் சிலைகள் புதியதாக வாங்கப்பட்டிருந்தது.
இந்த உற்சவர் சிலைகளுக்கென காலையில் பல்வேறு ஹோமங்கள்,கோ.பூஜை,லட்சுமி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகளும் நடந்தன.மகா பூர்ணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடந்தது.இதனைத் தொடர்ந்து மாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தை காஞ்சிபுரம் எஸ்.கணபதி குருக்கள் ஆகம விதிகளின்படி மாங்கல்யம் சூட்டினார்.
பின்னர் வள்ளி,தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி கேடயத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவாக சீர்காழி கதிர்வேல் சுப்பிரமணியன் ஓதுவார் தலைமையிலான திருமுறை திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி எஸ்.வேணுகோபால் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் திருத்தணிகை தமிழ் புத்தாண்டு படிபூஜை விழாக்குழு தலைவர் எஸ்.ரத்தினவேல், படவேட்டம்மன் கோயில் அறங்காவலர் எம்.ஜி.வடிவேல், கைச்சிலம்பாட்ட கலைஞர்கள் சங்க தலைவர் எஸ்.மணிவண்ணன், பொறியாளர் வி. அரிவேங்கடம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments