Breaking News

காஞ்சிபுரத்தில் ஸ்ரீபாண்டவ தூதப்பெருமாள் வீதியுலா

காஞ்சிபுரம், டிச.5-

காஞ்சிபுரத்தில் ராமானுஜரின் முக்கியச் சீடர்களில் ஒருவரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் ஜெயந்தி திருநாளையொட்டி திங்கள்கிழமை பாண்டவ தூதப்பெருமாள் நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீதியுலா வந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது சென்றதால் காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் பாண்டவ தூதப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். பழமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க இத்திருக்கோயிலில் ராமானுஜரின் முக்கியச் சீடர்களில் ஒருவராக இருந்து வந்தவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் திருஉருவச் சிலையும் உள்ளது. இவர் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று பிறந்தார்.

இவரது 1026 வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் பாண்டவ தூதப்பெருமாள் கோயிலில் ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. காலையில் பெருமாளுக்கும், தாயாருக்கும், அருளாளப் பெருமாளுக்கும் ஆலயத்தில் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. 

ஸ்ரீதேவி, பூதேவியருடன் வீதியுலா வந்த
 உற்சவர் பாண்டவ தூதப்பெருமாள்


மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் பாண்டவ தூதப்பெருமாளும், அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் தனித்தனி கேடயத்தில் ராஜவீதிகளில் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்தனர்.திவ்ய பிரபந்தம் மற்றும் வேதபாராயண கோஷ்டியினருடன் வீதியுலா வந்த பெருமாள் ஆலயத்துக்கு வந்து சேர்ந்ததும் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் ருக்மணித் தாயாருடன் சேர்ந்து கோயில் சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்தனர்.சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடந்தன.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments