Breaking News

TANCEM சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் உதவி திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க திட்டத்தொகை ரூ.3.00 இலட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.90,000/ வழங்கப்படுகிறது. 


இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

அரசாணை எண்.71, நாள்.26.08.2022 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சிஉதி) துறையில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் 100 ஆதிதிராவிடர்களுக்கும் (80) மற்றும்  பழங்குடியினருக்கும் (20) தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 3.00 கோடி மதிப்பீட்டில் மான்யம் ரூ.90.00 இலட்சம், வங்கி கடன் 195.00 இலட்சம் என முடிவு செய்யப்பட்டு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ஒதுக்கீடு அரசாணை வரப்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 02 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.90,000/ வீதம் 1.80 இலட்சம் ஆகவும், பழங்குடியினர் 1 நபருக்கு தலா ரூ.90,000/- ஆகவும் இலக்கு நிர்ணயித்து அரசாணை வரப்பெற்றுள்ளது. 

இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும், GST/Pan Card/ Address Proof இருக்க வேண்டும். 

விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. தாட்கோவின் மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டபின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் TANCEM நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். 


விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5000 வைப்புத் தொகை (Deposit) TANCEM நிறுவனத்திற்கு செலுத்தப்படும். 

கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய மற்றும் அதிகபட்ச மானியத் தொகை சென்றடைய, ஆதிதிராவிட தனி நபருக்கான திட்டத் தொகையில் 30 விழுக்காடு (அல்லது) அதிகபட்சமாக ரூ.2.25 இலட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபருக்கான திட்டத் தொகையில் 50 விழுக்காடு (அல்லது) அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகள்  tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.






No comments

Thank you for your comments