ஆன்லைனில் வேதிப்பொருட்கள் வாங்குபவர் விவரம் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க ஆன்லைன் நிறுவனங்களுக்கு உத்தரவு
கோவை மாவட்டம் வேதிப்பொருட்கள் வாங்குவோர் பற்றிய விவரங்களை உடனுக்குடன் வழங்க வேண்டும்' என, ஆன்லைன் நிறுவனங்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவையில் அக்டோபர் 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில் ஜமேஷா முபீன் என்பவர் பலியானார்.அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், 75 கிலோ வெடிபொருட்கள் சிக்கின.
இதேபால், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் அறையில் இருந்தும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் அனைத்தும், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களில் சிறிது சிறிதாக வாங்கப்பட்டவை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
எந்த விதமான கட்டுப்பாடும் இன்றி, வெடிகுண்டு தயார் செய்வதற்கு தேவையான அனைத்து வேதிப்பொருட்களும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது, பிரச்னைக்கு காரணம் என்பதை கண்டறிந்த போலீசார், அதற்கு அரசு உத்தரவு மூலம் 'கிடுக்கிப்பிடி' போட முடிவு செய்துள்ளனர்.
இதற்கு தேவையான விரிவான உத்தரவுகளை, மத்திய, மாநில அரசுகள் விரைவில் பிறப்பிக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே, பிரச்னைக்கு உடனடி தீர்வாக, அமேசான், பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் பொருள் விற்பனை நிறுவன நிர்வாகிகளுக்கு, தகுந்த அறிவுரைகள் போலீசாரால் வழங்கப்பட்டுள்ளன.
வேதிப்பொருட்கள் வாங்குவோர் விவரம், உடனுக்குடன் அந்தந்த மாவட்ட, மாநகர போலீசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இத்தகைய பொருட்களை வாங்கியவர்களின் பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருகிறது. சூழ்நிலையின் அவசரம் கருதி, ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள் கூட்டத்தை ஓரிரு நாட்களில் நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

No comments
Thank you for your comments