Breaking News

ஆவடி, திருமுல்லைவாயலில் வீடுகளை சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் பெரும் அவதி

ஆவடி 

ஆவடியில் அதிகபட்சமாக 17 செ.மீ கொட்டி தீர்த்து உள்ளது. இதன் காரணமாக ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆவடி ஸ்ரீராம் நகர், சரஸ்வதி நகர், திருநின்றவூர் பெரியார் நகர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது. 


இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சாலை முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்று வருகின்றன. 

கனமழை காரணமாக ஆவடி போலீஸ் நிலையத்துக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் போலீசார் அவதி அடைந்து உள்ளனர். மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. 

இதற்கிடையே ஆவடி பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டார். தாழ்வான இடங்களில் தேங்கி உள்ள தண்ணீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அமைச்சர் சா.மு.நாசர், ஸ்ரீராம் நகர் ,தமிழ்நாடு குடியிருப்பு, சரஸ்வதி நகர் தென்றல் நகர் உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு செய்து தேங்கி உள்ள மழை நீரை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

திருமுல்லைவாயல் தென்றல் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

 இன்று காலை பலத்த மழை இல்லாததால் பொது மக்கள் நிம்மதி அடைந்தனர். மழைநீரை அகற்றுவது குறித்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் 20 மோட்டார் மற்றும் 10 ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணி நடந்து வருகிறது. 

மேலம் 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.


 

No comments

Thank you for your comments