காஞ்சிபுரத்தில் பட்டு விற்பனையில் புரோக்கர்கள் தொல்லை அதிகரிப்பு... ஆட்சியரிடம் புகார்
காஞ்சிபுரம், செப்.26-
காஞ்சிபுரத்தில் பட்டு விற்பனையில் புரோக்கர்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியிடம் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் பழைய பட்டுச்சேலைகளை விலைக்கு வாங்கும் நிறுவனத்தை நடத்தி வரும் எம்.ஷபியுல் அகமது ஷெரீப் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..
காஞ்சிபுரத்திற்கு பட்டு நகரம் என்ற பெயரும் உள்ளது.இந்நகரில் பிரபலமான பட்டுக்கடைகள் அதிகமாக உள்ளன. இங்கு ஆந்திரம்,கர்நாடகம் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து தினசரி ஏராளமானோர் பட்டுச்சேலைகளை வாங்க வருகிறார்கள்.அவர்களை பட்டுச் சேலைகளை விற்பனை செய்யும் பிரபலமான கடைகளின் புரோக்கர்கள் மாவட்ட எல்லையிலையே வழிமறித்து அவர்களை திசை திருப்பி அவர்கள் பணிபுரியும் கடைகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.
இதனால் அரசின் சார்பில் நடத்தும் கூட்டுறவு பட்டு விற்பனை நிலையங்களுக்கு வரவேண்டிய விற்பனை வருவாய் வராமல் போய் விடுகிறது. அரசுக்கும் ஒரு சில கடைகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது.
பொய்யான தகவல்களை வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு நம்பும்படி தெரிவித்து திசை திருப்பும் வேலையை செய்து வருகின்றனர்.எனவே காஞ்சிபுரத்தில் புரோக்கர்களை நடமாட முடியாதபடி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

No comments
Thank you for your comments