Breaking News

ஆதிதிராவிடர், பழங்குடியினர் கறவைமாடு வாங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்குதல்

2022-2023 ஆம் ஆண்டு மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்பில் பெருமளவில் விவசாயத் தொழில்புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவைமாடு வாங்க ரூ.1.50 இலட்சம் திட்டத்தொகையில் 30 சதவீதம், அதாவது ரூ.45,000/- மானியமும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.


இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 முதல் 65 வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது.

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடராக இருப்பின் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியில் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதாரர் அட்டை மற்றும் மாடு வாங்குபவரிடமிருந்து பச்சைத்தாளில் மாடுகளின் விலையை குறிப்பிட்டு எழுதி வாங்கிய சான்று ஆகிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பங்கள் தாட்கோ இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.

எனவே, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments