பெட்ரோல் பங்குகளுக்கு எஸ்பி அதிரடி உத்தரவு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் காஞ்சிபுரத்திலுள்ள பெட்ரோல் பங்குகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டிகளுக்கும்,பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.
கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க கூடாது என தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வாங்கவும் கூடாது,வழங்கவும் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் படி காஞ்சிபுரத்தில் சிவ காஞ்சி காவல் நிலையம், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெட்ரோல் பங்குகளில் இன்று போலீசார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேன்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என்றும், பெட்ரோல் பங்க்கிற்கு பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகளிடம் காவல்துறையின் மறு அறிவிப்பு வெளிவரும் வரை கேன்களில் பெட்ரோல் வாங்குவதை தவிர்த்து காவல்துறைக்கு தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் கேன்களில் பெட்ரோல் வாங்க வந்தவர்களிடம் கேன்களில் பெட்ரோல் வாங்க கூடாது என அறிவுரைகளை வழங்கினர்.



No comments
Thank you for your comments