ஆட்டோமொபைல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட நவம்பர் 11ல் போராட்டம் மாநாடு அறைகூவல்
காஞ்சிபுரம், ஆக 31-
உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்கள் ஒருகினைப்புக்குழு முதல் அகில இந்திய மாநாட்டில் ஆட்டோமொபைல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட நவம்பர் 11ல் போராட்டம் என சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் அறைகூவல் விடுத்தார்.
அசல் வாகன உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் முதல் அகில இந்திய மாநாடு தமிழ்நாடு காஞ்சிபுரம் மாநகரில் ஆகஸ்ட் 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் அகில இந்திய மாநாட்டிற்க்கு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் துவக்கி வைத்துப் பேசினார்.
கர்நாடகா மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், அகில இந்திய துணைத் தலைவர்கள் உமேஷ், சாய்பாபு, சந்திப் குப்தா, தமிழ் மாநில இணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், ஆர்.சிங்காரவேலு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அசல் வாகன உற்பத்தி நிறுவனம் தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு 35பேர் கொண்ட குழுவின் கன்வினராக எஸ்.கண்ணனும், உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனம் தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு 45பேர் கொண்ட குழுவின் கன்வினராக பரத்வாஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னதாக அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
இந்திய முழுவதும் இருக்கக்கூடிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையங்கள் பதினாறு மாநிலங்களில் உள்ளன. இந்தியாவின் கார் உற்பத்தி தொழில் பிரதானமாக மூன்று மையங்களில் நடைபெறுகிறது. அதில் சென்னையை சுற்றியுள்ள பகுதி மொத்த வருவாயில் 35 சதவீதமாகும்.
நாட்டின் மொத்த ஆட்டோ மொபைல் ஏற்றுமதியில் 60 சதவிகிதம் சென்னை சுற்றியுள்ள ஆலைகளான அசோக் லைலாண்ட், ஃபோர்டு, ஹூண்டாய், ரெனால்ட், மிட்சுபிசி, நிஸான், பிஎம்டபிள்யூ, சிற்றோன், டெய்மர், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், கப்பாரோ, மினி ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது.
ஆட்டோமொபைல் கார், இருசக்கர வாகனம் போன்ற உற்பத்தி நிறுவனங்களுக்கு தனியாகவும் அந்நிறுவனங்களுக்கு உதிரிபாகம் செய்யும் நிறுவனங்கள் இரண்டிற்கும் அகில இந்திய கிளை உருவாவதற்கு இங்கு இரண்டுற்க்கும் தனித்தனியே சிறப்பு மாநாடுகள் நடைபெற்றது.
ஆட்டோமொபைல் தொழில் இன்றைக்கு எதிர்கொள்ளும் பிரச்சனை அதில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு சிரமங்களும், கஷ்டங்களும் நிறைந்துள்ளது. தொழிற்சங்கத்தை அனுமதிக்காமல் செய்யக்கூடிய அநியாயங்கள் நடைபெறுகிறது.
தொழிலாளர்களை பழிவாங்குவது, நிரந்தர தொழிலாளர்களை மிககுறைவாக பணியாமத்துவதும், நிரந்தரமற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி உழைப்பை சுரண்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே வேலைக்கு பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லை, இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை இழப்பு என்பது பரவலாக நாடு முழுவதும் நடந்த வண்ணம் இருக்கிறது.
தமிழகத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைளை நிர்வாகம் மூடுவதை எந்த காரணம் என அரசு தெரிந்து கொள்வதில்லை, நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. ஆனால் நோக்கிய செல்போன் யாரும் பயன்படுத்தாமல் இல்லை மீண்டும் நோக்கியா, ஃபாஸ்கான் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது.
இதை அரசு அனுமதிக்ககூடாது, தொழிற்சாலை மூடுவதை அரசிடம் அனுமதிப் பெற வேண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளை மூடுவது அதிகரித்து வருகின்றது.
மேலும் அதிகரிக்க வாய்ப்பும் உள்ளது, வாய்ப்புகளை உருவாக்குவதை பார்க்க முடிகின்றது. அதே சமயம் தொழிற்சாலைகளை மூடுவதும் வேலையிழப்பு தொடர் கதையாகவுள்ளது இதில் தமிழக அரசு தலையிட வேண்டும் என பேசினார்.
ஹூண்டாய், ஃபோர்ட்:
ஹூண்டாய் போன்ற தொழிற்சாலைகளில் ரோபோக்கள் புகுத்தி தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை அந்நிறுவனம் குறைந்து வருகிறது. அதேபோல ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கிற ஏறக்குறைய 40 தொழில் நிறுவனங்கள் மூடுவோம் அல்லது ஆட்கள் எண்ணிக்கையை குறைப்போம் என்று அந்நிறுவனங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இது போன்ற கடுமையான நெருக்கடி சூழல் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதனால் தமிழக அரசு இதன் மீது கவனம் செலுத்துவதும், இதில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் என்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
மேலும் ஒன்றிய அரசு எடுக்கக்கூடிய தொழிலாளர்களின் சட்ட திருத்தத்தை குறித்து விவாதித்து இருக்கிறோம் அது குறித்து சிஐடியு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளிலும் ஆட்டோ மொபைல் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும். இதன் தொடர்ச்சியாக ஆட்டோமொபைல் ஒருங்கிணைப்பு குழு இந்தியா முழுவதும் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்காக ஒரு வலுவான அமைப்பாக இந்தியாவில் ஆட்டோமொபைல் உருவாகும் என்றார்.
பரந்தூர் விமான நிலையம்:
சென்னை அருகே காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, குடியிருப்புகள், விளை நிலங்கள், நீர்நிலைகள், காலம் காலமாக குடியிருக்கும் மக்கள் பாதிக்காமல் விமான நிலையம் அமைக்க வேண்டும், ஒரு வேலை பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இப்போது இருப்பது போலவே வீடு, விவசாய நிலங்கள், உருவாக்கி தர வேண்டும் இல்லை என்றால் மக்களின் துயரங்களை தாங்கி கொள்ள முடியாது, விமான நிலையம் வேண்டும் என ஒரு பக்கம் இருந்தாலும், ஏற்கனவே காலம் காலமாக வாழகூடிய வாழ்க்கையையும் பாதுகாக்கப்பட வேண்டும், விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளது மக்கள் குடியிருப்புகள் பாதிக்காமல் விமான நிலையம் அமைத்தில் மக்கள் துயரம் குறையும் என பேசினார்.




No comments
Thank you for your comments