Breaking News

பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியது பாஜக

நெல்லை: 

தமிழகத்தில் வருகிற 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜனதா ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள நிலையில், 3-வது முறையும் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க ஆர்வம் காட்டி வருகிறது. 

இதற்காக பல்வேறு அதிரடி திட்டங்களை கட்சி தலைமை வகுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் குறிப்பிட்ட சில தொகுதிகளை குறிவைத்து பா.ஜனதா கட்சி தற்போதே காய் நகர்த்த தொடங்கி உள்ளது. 


சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த பா.ஜனதா, பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை தொடரும் என மாநில நிர்வாகிகள் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில் தமிழகத்தில் நெல்லை, குமரி, சிவகங்கை, வேலூர் உள்பட மொத்தம் 8 பாராளுமன்ற தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது. 

இந்த தொகுதிகளில் கோவை, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளும் பா.ஜனதாவின் பரிசீலனையில் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். நெல்லை, குமரி, கோவை மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு வாக்கு வங்கிகள் அதிகமாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

அதேநேரத்தில் சிவகங்கை தொகுதியில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாவிட்டாலும், அங்கு ஹெச்.ராஜாவுக்கு வாய்ப்பு வழங்க அந்த தொகுதியையும் பா.ஜனதா குறி வைத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்த 8 தொகுதிகளிலும் முதலில் கிராமப்புறத்தில் வசிக்கும் மக்கள் வரையிலும் மத்திய அரசின் திட்டங்கள், அதன் பயன்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது. 

தற்போது நெல்லை, குமரி, சிவகங்கை, வேலூர் ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளராக மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி வி.கே.சிங்கை பா.ஜனதா தலைமை நியமித்துள்ளது. 

அவர் நேற்று நெல்லை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல மாதந்தோறும் இந்த தொகுதிகளுக்கு வந்து முகாமிட்டு கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். 

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தாலுகா வாரியாக சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிறை குறைகளை கேட்டறிய உள்ளார். தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை பற்றி மக்களிடம் எடுத்து கூற தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேபோன்று 8 தொகுதிகளிலும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி கட்சியை வலுப்படுத்த தேவையான அதிரடி நடவடிக்கைகளில் பா.ஜனதா ஈடுபட தொடங்கி உள்ளது. 

தேர்தலுக்கு இன்னும் 1½ வருடங்களுக்கு மேல் உள்ள நிலையில் தற்போதே தங்களது கட்சிக்கு தேவையான தொகுதிகளை முடிவு செய்து அந்த தொகுதிகளில் வேலைகளை ஆரம்பித்துள்ளதால் பா.ஜனதா நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


 

No comments

Thank you for your comments