இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 18,930 ஆக உயர்வு
புதுடெல்லி:
ஒமைக்ரான் வைரசின் புதிய வகை திரிபுகளால் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 13,086 ஆக இருந்தது. நேற்று 16,159 ஆக உயர்ந்த நிலையில், 2வது நாளாக இன்றும் பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளாவில் 4,113, மகாராஷ்டிராவில் 3,142, தமிழ்நாட்டில் 2,743, மேற்கு வங்கத்தில் 2,352, கர்நாடகாவில் 1,127 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 66 ஆயிரத்து 739 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பால் கேரளாவில் 19, மகாராஷ்டிராவில் 7 உள்பட மேலும் 35 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,25,305 ஆக உயர்ந்தது. கொரோனாவின் பிடியில் இருந்து 14,650 பேர் நேற்று நலம் பெற்றனர்.
இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 977 ஆக உயர்ந்தது. தற்போது 1,19,457 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது நேற்றை விட 4,245 அதிகம் ஆகும். நாடு முழுவதும் இதுவரை 198 கோடியே 33 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 11,44,489 டோஸ்கள் அடங்கும். இதற்கிடையே நேற்று 4,38,005 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 86.53 கோடியாக உயர்ந்துள்ளது.
No comments
Thank you for your comments