Breaking News

ஊடகங்களை அமைச்சர் சேகர்பாபு சீண்டிவிடுகிறார்.. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை:

சிதம்பர நடராஜர் கோவிலில் தவறு நடந்திருந்தால் அதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதுக்குறித்து ஊடகங்கள் எதற்காக பேசவேண்டும் என்று கேள்வியெழுப்பிய  அண்ணாமலை, இது தமிழக அரசின் திசை திருப்பும்  நடவடிக்கை தான் என்று குற்றச்சாட்டினார். மேலும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஊடகங்களை சீண்டிவிடுகிறார் என்றும் தெரிவித்தார்.



சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

இரட்டை மலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும். சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர் என்று கூறிய அவர், காந்தியை தமிழில் கையெழுத்து போட வைத்தர் என்று புகழாரம் சூட்டினார். எனவே அவர்  மரியாதை செலுத்துவதில் பாஜக பெருமை கொள்கிறது. மேலும் தான் பிறந்த சமுதாயத்துக்காக தொண்டாற்றியவர். தாழ்ந்தப்பட்ட சமூகத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமைக்குரியவர் என்று கூறினார்.  



மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்டித்தந்தார் என்று தெரிவித்த அவர், மணிமண்டபத்தை மேம்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


தொடர்ந்து சிதம்பர நடராஜர் கோவில் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, அக்கோவிலுக்கு என்ற மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மேலும் கோவிலை நிர்வகிக்கும் தீட்சிதார் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி வருகின்றனர். 

இதில் அமைச்சர் சேகர்பாபு எதை புதிதாக கண்டுபிடித்தார் என்று கேள்வியெழுப்பிய அவர், கோவிலில் தவறு நடந்திருந்தால் அதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதுக்குறித்து ஊடகங்கள் எதற்காக பேசவேண்டும் என்றும் விமர்சித்தார். இது எல்லாம் தற்போதைய தமிழக அரசின் திசை திருப்பும்  நடவடிக்கை தான். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஊடகங்களை சீண்டிவிடுகிறார் என்று குற்றச்சாட்டை எழுப்பினார். அதுமட்டுமல்லாமல், சிதம்பரம் நடராசர் கோயிலை அமைச்சர் சேகர்பாபு ஹார்ஸ் செய்துவருகிறார் என்று மிக கடுமையாக சாடினார்.


மேலும் பேசிய அவர், 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 எம்.பிக்களை வெல்லும் என்று கூறிய அவர், அதனை காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பார்க்க தான் போகிறார் என்றும் சவால் விட்டார்.  காங்கிரஸ் கட்சி கோஷ்டி மோதலால் தற்போது பல பிரிவுகளாக உள்ளதாகவும் அதனை ஒட்டவைக்க பாஜக Feviquick வாங்கித்தர தயாராக உள்ளதாகவும் கிண்டல் அடித்தார். மேலும் கே.எஸ்.அழகிரி தனது கட்சியை ICU-வில் வைத்து உள்ளதாகவும் விமர்சித்தார். தமிழகத்தில் பாத யாத்திரையை பாஜக கண்டிப்பாக நடத்தியே தீரும்.தமிழ்நாட்டின் 3-வது பெரிய கட்சியாக பாஜக தற்போது வந்துள்ளது என்று தெரிவித்தார்.

இளையராஜா குறித்த கேள்விக்கு, தென்னிந்தியாவை சேர்ந்த 4 பேர் மாநிலங்களவை நியமன எம்.பிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜவும் ஒருவர். இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வேண்டும். தற்போது அவருக்கு மாநிலங்களவை எம்.பி பதவி கிடைத்திருப்பதை, தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக எண்ணி கொண்டாடி வருகின்றனர். 

மேலும் அரசியலை தாண்டி வாழ்த்தப்பட வேண்டியவர் இளையராஜா. மேலும் அவர் சாதி, மதங்களை கடந்து ஒரு சிங்கமாகவும் வைரமாகவும் திகழ்ந்து வருகிறார் என்று பாராட்டினார். தனது சொந்த உழைப்பால் உயர்ந்தவர். அவருக்கு எந்த அடையாளங்களும் தேவையில்லை.  இளையராஜா என்பவர் அனைவருக்கும் சமமானவர்.அவரை எந்த அடையாளத்திலும் அடைக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார். இளையராஜா தனது சொந்த உழைப்பால் பெற்ற பதவியை கொச்சைப்படுத்திவருகின்றன எதிர்க்கட்சிகள் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

No comments

Thank you for your comments