Breaking News

நிலவொளிப் பள்ளிகள் மூலம் நேரிடையாக 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வு எழுதலாம்.. அழைப்பு விடுக்கும் ஆட்சியர் ஆர்த்தி

 காஞ்சிபுரம்

நிலவொளிப் பள்ளிகள் மூலம் நேரிடையாக 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வு  எழுதலாம் என்று ஆட்சியர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புரப்பகுதிகளில் உள்ள உழைக்கும் தொழிலாளர்களுக்காக நிலவொளிப்பள்ளிகள் மாவட்ட நிர்வாகத்தால் 1998ல் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. 

நிலவொளிப் பள்ளிகள் படிப் படியாக உயர்ந்து  24 பள்ளிகளாக அதிகரித்தது. நிலவொளிப்பள்ளிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படுவதால் இதற்கு தேவையான நிதியை தன்னார்வமிக்க நன்கொடையாளர்கள் மூலம் வழங்படும் நிதி வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. 



அனைவருக்கும் ஆரம்பக் கல்வித் திட்டம் மாவட்டத்தில் நடைபெற்றதால் நிலவொளிப்பள்ளிகளின் தேவை குறைந்து 2 பள்ளிகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும் பள்ளியில் இடைநின்ற மாணவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் ஆகியோர் தொடர்ந்து கல்வி கற்பதற்கு நிலவொளிப் பள்ளிகள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. 

நிலவொளிப் பள்ளிகள் மூலம் கல்வியை பெற்றவர்கள் பல்வேறு அரசுதுறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்திற்குபின் மீண்டும் நிலவொளிப்பள்ளிகளை திறக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக யாகசாலை மற்றும் சி.எஸ்.எம். நிலவொளிப்பள்ளிகள் தொடங்கப்படவுள்ளது.  அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நிலவொளிப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளது.

நிலவொளிப்பள்ளிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அவர்களுடைய கல்வித் தகுதியை பொறுத்து நேரிடையாக 8, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 

மேலும் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுத தகுதியானவர்களும் சேர்ந்து நிலவொளிப்பள்ளிகளில் படிக்கலாம். நிலவொளிப் பள்ளிகள் இரவு 7 மணிக்கு ஆரம்பித்து 9.00 மணிவரை நடைபெறுகிறது.

நிலவொளிப் பள்ளிகள் மூலம் நேரிடையாக 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வு எழுதும் கற்போர்களுக்கு தமிழக அரசு அரசாணை எண் (நிலை) 69 நாள் 02.6.2003 படி, தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

நிலவொளிப் பள்ளியில் படிக்கும் கற்போர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விலையில்லா பாட புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் கற்பித்தல் பொருட்கள் வழங்கப்படும்.

நிலவொளிப் பள்ளியில் சேர விரும்புவர்கள் 74184 19495 என்ற வாட்சப் எண்ணில் 20.07.2022க்குள் தங்களுடைய விவரங்களை தெரிவித்துக் கொள்ளலாம். மேலும் 044-27237696-ல் மாவட்ட அறிவொளி இயக்க திட்ட அலுவலக எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.  எனவே உழைக்கும் தொழிலாளர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments