வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு
காஞ்சிபுரம், ஜூலை 6-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 120 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.7.2022) காஞ்சிபுரம் மாவட்டத்தில் 120 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தந்திக்கால் வாய்க்கால், போரூர் உபரிநீர் கால்வாய் மற்றும் வரதராஜபுரம், ராயப்பா நகரின் வெளிவட்ட சாலை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்து, வரும் பருவமழை காலங்களில் மக்களுக்கு மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி தமிழகமெங்கும் வெள்ளத் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
கடந்த பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், வெள்ளப் பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத் தடுப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கொளுத்துவான்சேரி சாலையில் 16 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தந்திக்கால் கால்வாய் முதல் போரூர் ஏரி உபரிநீர் கால்வாய் வரை புதிய மூடுதளத்துடன் கூடிய கால்வாய் அமைக்கும் பணியில், உள்வட்ட சாலையில் அமைந்துள்ள தந்திக்கால் வாய்க்காலில் நடைபெற்று வரும் உபரிநீர் போக்கி மற்றும் கதவுகள் அமைக்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இவ்வெள்ளத் தடுப்புப் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.
பின்னர், போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாயினை 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் மற்றும் ஒழுங்கியம் அமைக்கும் பணியில், உள்வட்ட சாலையில் அமைந்துள்ள போரூர் உபரிநீர் கால்வாயில் நடைபெற்று வரும் அடித்தள கான்கிரீட் அமைக்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தாம்பரம் பகுதிக்கு அருகில் அடையாறு ஆற்றுப் பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ள அபாயத்திலிருந்து தவிர்க்கும் பொருட்டு, 70 கோடியே
5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சோமங்களம் கிளை ஆற்றிலிருந்து ஒரு புறவழி பெரு மூடு வடிகால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் லி.ஷி. 5970 மீட்டர் முதல் லி.ஷி. 19150 மீட்டர் வரை வெள்ள நீர் கடத்தும் திறனை அதிகப்படுத்தும் பணியில், வரதராஜபுரம், ராயப்பா நகர், வெளிவட்ட சாலையில் நடைபெற்று வரும் மூடுதள கால்வாய் அமைக்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வெள்ளத்தடுப்பு பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் முரளிதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments